இளையான்குடி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான விஷ்ணு பிரதாப் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகளின் சுமார் 5.00 மணி நேரமாக நீடித்த  சோதனை நிறைவு. மொபைல் போன் மற்றும் புத்தகங்களை கைப்பற்றி சென்றனர்.

 

நா.த.க., நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ., சோதனை


தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இரண்டு இடங்கள், சென்னை, திருச்சி, தென்காசியில் தலா ஓர் இடம் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சண்முகா நகரில் இருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றது தொடர்பாகவும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




சோதனை நடத்தி வருவது ஒரு புறம் இருக்க நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கை ஆஜராக என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை சென்னையில் இருக்கும் என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர் வெளியூரில் இருப்பதால் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆஜராக இருப்பதாக பதிலளித்துள்ளார். என்.ஐ.ஏ., சோதனையின் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபர் விஷ்ணு பிரதாப் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சுமார் 5.00 மணி நேரமாக நீடித்த  சோதனை நிறைவடைந்தது.  மொபைல் போன் மற்றும் புத்தகங்களை கைப்பற்றி சென்றுள்ளதும் குறிப்பிடதக்கது.





சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த, பகை வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரதாப். இவர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என்று சொல்லப்படும் நிலையில் , இவர் தென்னகம் என்ற யூடியூப்- சேனல் ஒன்றை கடந்த 2020 டிசம்பர் 27- ம் தேதி முதல் நடத்தி வருகிறார். தனது யூடியூப் சேனலில் சுமார் 275க்கு வீடியோக்கு மேல் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.  நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் மற்றும் தமிழ் பற்றாளர்கள் குறித்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இவரது வீட்டிற்கு வந்து சோதனையில்  ஈடுபட்டனர்.  சுமார் 5 மணி நேரம் நீடித்த சோதனை 10.00 மணி அளவில் நிறைவு பெற்றது.  இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் உள்ளனவா என 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவருக்கு இலங்கைத் தமிழர்கள் உட்பட வேறு இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா,   வெளிநாட்டிலிருந்து பணம் ஏதும் பெற்றுள்ளாரா என்பன குறித்து விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலை 10 மணி அளவில் நிறைவுற்ற இச்சோதனையில் ஒரு மொபைல் போன் மற்றும் பிரபாகரன் அட்டைப்படத்துடன் கூடிய நான்கு புத்தகங்கள் மற்றும் வேறு சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதெரிகிறது. என்.ஐ.ஏ., சோதனையால் இளையான்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.