போலீஸ் தாக்கியதில் 2 பேர் இறந்ததை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் - நீதிமன்றம் அனுமதி மறுப்பு

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைை தெரிவிக்க அனுமதிக்க கோரி மனு அளித்தும் அனுமதி வழங்கப்படவில்லை.

Continues below advertisement

காவல்துறையினர் தாக்கியதில் இருவர் இறந்ததை கண்டித்து மதுரை, நெல்லை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் உறுப்பினர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்க அனுமதி கோரிய வழக்கில், சுதந்திர தினத்தை ஒட்டி மூன்று தினங்களுக்கு எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற விதி ஏற்கனவே உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

மதுரை திருநகரைச் சேர்ந்த மகாராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018 மார்ச் மாதம் மாணிக்கராஜ், முருகேசன் ஆகிய இருவரும் தாழையூத்து துணை காவல் கண்காணிப்பாளரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டனர். பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மார்ச் 30,31 ஆகிய இரு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

துணை காவல் கண்காணிப்பாளர்  காவலில் வைத்து தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் 25 காவல்துறையினர் உட்பட தொடர்பு இருப்பதாக குறிப்பிடும் நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிபிசிஐடிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. இது தொடர்பாக உரிய நிவாரணம் கோரி உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைை தெரிவிக்க அனுமதிக்க கோரி மனு அளித்தும் அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே மதுரை, நெல்லை உள்ளிட்ட எட்டு மாவட்ட நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் உறுப்பினர்கள் வீடுகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சுதந்திர தினத்தை ஒட்டி மூன்று தினங்களுக்கு எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற விதி ஏற்கனவே உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 


மற்றொரு வழக்கு
 
நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில்  கல்குவாரியில் கடந்த மே 14ஆம் தேதி  இரவு திடீரென பாறை சரிந்து விழுந்தது. இதில்  4 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து மாவட்டத்தில் குவாரிகள்,  கிரசர்கள் இயங்க  தடை விதிக்கப்பட்டது . மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பல குவாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.
 
இந்நிலையில் நெல்லை மாவட்ட குவாரிகள் சங்கம் சார்பாக முறையாக அனுமதி பெற்று செயல்படக்கூடிய குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரால் விதிக்கப்பட்ட அபராத தொகை ரத்து செய்து வழக்கம் போல் குவாரிகளில் இருந்து கற்களை லாரிகள் மூலம் ஏற்றி செல்ல  டிரான்சிட் பாஸ் அனுமதியை வழங்க நெல்லை  புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநர் அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
 
அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படவும் கல்,  ஜல்லி  மற்றும் எம்-சான்ட் போன்ற  கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என உத்தரவு பிறப்பித்த நீதிபநி  விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 300 கோடி ரூபாய் மாவட்டம் நிர்வாகம் சார்பாக குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது இதை மறுபரிசீலனை செய்யவும் என்றும் குவாரிகளை  மீண்டும்  அளவீடு செய்து விதிமுறை மீறி இருந்தால் அபராதம் விதிப்பது குறித்து  புதிய நோட்டீஸ் வழங்கலாம் எனவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

 
 
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola