முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க, ரத்தத்தால் கையொப்பமிட்டு ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
  

 

தேவர் ஜெயந்தியில் அதிமுக

 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 13 கிலோ தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் இருக்கக்கூடிய பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ளது.

 

அதிமுக பொறுப்பாளராக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நினைவிட பொறுப்பாளர் காந்தி மின்னல் வங்கி மேலாளர்கள் ஆகியோர் கையொப்பமிட்ட பிறகு,  முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர்  திண்டுக்கல் சீனிவாசனிடம்  தங்க கவசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு வாகனம் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது.

 



 


ரத்தத்தால் கையொப்பமிட்டு அழைப்பு 

 


இந்நிலையில் வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்  குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவைவுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வர உள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக செல்ல உள்ள  அவருக்கு வரவேற்பு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.



 

இதில் கழக அம்மா பேரவை சார்பில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்," அதிமுக காலகட்டத்தில் வழங்கப்பட்ட தங்கக் கவசம் அணிந்து தெய்வமாக வீட்டில் இருந்து அருள் பாலிக்கக் கூடிய முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் வருகை தந்து மரியாதை செய்ய உள்ளார்.

 

இந்த நிலையில் ரத்த உறவை அழைக்கும் வகையில் அதிமுக நிர்வாகிகள் தங்கள் ரத்தத்தினால் கையொப்பமிட்டு வரும் முகாமை துவக்கி வைக்கிறேன். கடந்த அதிமுக ஆட்சியின்போது பசும்பொன் வரும் அனைத்து இயக்க தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததைப் போல இந்த ஆட்சியிலும் திமுகவினர் செய்து கொடுப்பார்கள் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என தெரிவித்தார்.



 

மேலும் அனைவரும் தங்களது விரல் ரேகை பதியும் வண்ணம், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பசும்பொன் நோக்கி வரக்கூடிய வகையில் ரத்தத்தால் அழைப்பு விடுத்தனர்.