நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"சமீபகாலமாக பிரசவம் என்பது அதிக செலவு பிடிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை என இருவழி பிரசவங்களுக்குமே அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுகப்பிரசவம் என்றாலும் கருவிகளை பயன்படுத்தி நடைபெறும்  பிரசவங்களுக்கு 30,000 ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை எனில் இரண்டு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது  குழந்தை பிறந்த பின்னரும் தாயும், சேயும் மருத்துவமனையில் மூன்று முதல் ஐந்து நாட்கள் தங்கி இருக்க வேண்டும் எனக் கூறி, அறைக்கட்டணம், பரிசோதனைக்கான செலவுகள் என பெரும் அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  ஒரு மருத்துவமனையில் விதிக்கப்படும் கட்டணம் இன்னொரு மருத்துவமனை கட்டணத்திலிருந்து மாறுபட்டதாக உள்ளது.

 

இது குறித்து கேள்வி எழுப்பினால் மருத்துவமனையின் தரம், அமைவிடம், சிறப்பு வசதிகள் என குறிப்பிட்டு கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது. இந்திய மருத்துவ கழகத்தின் விதிகளின் படி ஒவ்வொரு மருத்துவமனையிலும் மருத்துவ கட்டணம் குறித்த தகவல் பலகை வைக்கப்பட வேண்டும். ஆனால் எந்த மருத்துவமனையும் இந்த விதியை முறையாக பின்பற்றவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் பலனில்லை. ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் தங்களது மருத்துவ கட்டணம் குறித்த தகவல் பலகையை வைப்பது தொடர்பான விதியை முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா வேல்முருகன் அமர்வு மருத்துவ கட்டணம் என்பது ஒவ்வொருவரின் உடல் நல பிரச்சனைகளை பொருத்தும், அதற்கு அளிக்கப்படும் சிகிச்சையைப் பொருத்தும் மாறுபடும் எனக் கூறி மனுவை மனுதாரர் திரும்பப் பெறுவதற்காக வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.