மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு குல தெய்வ கோயில்களுக்கு படையெடுத்த மக்களால் - நான்கு மாவட்டங்களை இணைக்கும் உசிலம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவராத்திரி, மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி ஆகும். இவற்றில் மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்தசியில் வருவது. அந்த வகையில் இந்தாண்டு ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 8 ம் தேதி நடக்கிறது. இதைஒட்டி பல்வேறு சிறப்புமிக்க கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரி பெருவிழா நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி ஒரே நாளில் வந்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தது குறிப்பிடதக்கது.


ஒச்சாண்டம்மன் கோயிலின் மாசி பெட்டி


உசிலம்பட்டி அருகே உலக புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலின் மாசி பெட்டி திருவிழா வெகுவிமர்சையாக துவங்கியது.  மாசி பெட்டி கோயிலுக்கு பக்தர்கள் படை சூழ எடுத்து செல்லப்பட்டது.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில். இந்த கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒச்சாண்டம்மன் ஆடை ஆபரணங்கள் அடங்கிய புகழ்பெற்ற மாசி பெட்டி எடுக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் ஆதி வழக்கப்படி துவங்கிய இந்த மாசி பெட்டி எடுக்கும் விழாவில் முதல் நாளான இன்று உசிலம்பட்டி சின்னக்கருப்ப சாமி கோயிலிருந்து ஒச்சாண்டம்மனின் ஆடை, ஆபரணங்கள் அடங்கிய 5 மாசி பெட்டிகளை பூசாரிகள், கோடாங்கிகள் அருள் இறங்கி ஆடி பக்தர்கள் ஆரவாரத்துடன் பாப்பாபட்டியில் உள்ள கோயிலுக்கு எடுத்து சென்றனர்.


பூசாரிகள் ஆனி செருப்பு அணிந்து நடக்கும் நிகழ்வு


புகழ்பெற்ற மாசி பெட்டி உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வடகாட்டுப்பட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, இளந்தோப்பு வழியாக 11 கிலோ மீட்டர் நடைபயணமாக பாப்பாபட்டிக்கு இன்று இரவு எடுத்து செல்லப்படும், வழிநெடுகிழும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று மாசி பெட்டியை வழிபட்டு தரிசனம் செய்தனர். இந்த பெட்டியில் உள்ள உபகரணங்களை இன்று இரவு ஒச்சாண்டம்மனுக்கு அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உசிலம்பட்டியில் உள்ள சின்னகருப்புக் கோயிலுக்கு எடுத்து வரப்படும்., அவ்வாறு திரும்பி வரும் போது உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் காவல்துறைக்கு மரியாதை செய்யும் நிகழ்வு, பூசாரிகள் ஆனி செருப்பு அணிந்து ( பாதாள கட்டையில் ) நடந்து வரும் நிகழ்வை காண லட்சக்கணக்கான மக்கள் உசிலம்பட்டியில் கூடி நின்று மாசி பெட்டி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


போக்குவரத்து நெரிசல்


மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியான உசிலம்பட்டி நகர் பகுதி வழியாக  ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சூழலில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்தவாரே சென்றன.