திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோயில் தரிசனத்தில் அறநிலையத்துறை அதிரடி மாற்றத்தை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பக்தர்கள் விரைவாக தரிசிக்க முடியும்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ளது. பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்கள், விசேஷ தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் தான், பழனி முருகன் கோயில் தரிசனத்தில் அறநிலையத்துறை அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது. இதனால், எளிதாக டிக்கெட் பெற்று முருகனை தரிசனம் செய்யலாம். இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதி மற்றும் நலன் கருதி திருக்கோயிலில் உள்ள சேவைகள் மற்றும் வசதிகளை எளிதில் பக்தர்கள் பெற்று பயன்பெறும் வகையில் இத்திருக்கோயில் வலைதளமான palanimurugan.hrce.tn.gov.in என்ற வலைதளத்தின் மூலமும் (அல்லது) QR Code மூலமும் (அல்லது) திருக்கோயில் செயலி என்ற கைபேசி செயலி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தரிசன கட்டணத்தை பொறுத்தவரை, ஒரு நபருக்கு தரிசன கட்டணம் ரூ.100, 10, விசேஷ தினங்களில் ரூ.200 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அர்ச்சணைக்கு ரூ.5, காதுகுத்து கட்டணம் ரூ.50, பால் அபிஷேகத்திற்கு ரூ.25, அனைத்து அபிஷேகம் ரூ.75, பஞ்சாமிர்த அபிஷேகம் ரூ.75 என பல தரிசனத்திற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேற்காணும் வசதிகளை பக்தர்கள் பயன்படுத்தி தங்கள் தரிசனத்திற்கு உரிய முன்னேற்பாடுகளுடன். முன்பதிவு செய்ததற்கான ஆவணம் மற்றும் அடையாளஅட்டைகளுடன் வருகைதந்து இறையருள் பெறுமாறு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.