பெளர்ணமி நிலவில் மதுரை வைகை நதிக்கு மஹா ஆரத்தி திருவிழா நடைபெற்றது திரளான பெண்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் பங்கேற்பு

 

மகாமகக் குளத்தில் ஆரத்தி பெருவிழா


வருணபகவானைப் பிடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார். மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம். இத்தகைய சிறப்பு பெற்ற விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆரத்தி பெருவிழா நடத்தப்படுகிறது.




வைகை மகா ஆரத்தி திருவிழா



இந்நிலையில் மகாமக குளம், காவிரி, தாமிரபரணியை தொடர்ந்து மதுரை வைகை ஆற்றில் இயற்கை வளங்களில் ஒன்றான நதிகளை தூய்மையாக பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக வைகை மகா ஆரத்தி திருவிழா நடைபெற்று வருகிறது.

 

 2023-ஆம் ஆண்டின்  மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு வைகை நதியின் மக்கள் இயக்கம் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் வைகை ராஜன் தலைமையில் வைகை ஆற்றங்கரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் காசி கங்கை ஆரத்தி போல வைகை அன்னைக்கு பெளர்ணமி நிலவில் வைகை நதிக்கு மஹா ஆரத்தி திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓதுவார்கள் 13 திருமுறை, வேதம் மந்திரங்கள் போன்றவை வாசிக்கப்பட்டது.



 

இந்த வைகை ஆரத்தி திருவிழாவில் திரளான பெண்கள்,பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்பு சுமார் 6 மணி அளவில் வைகை அன்னைக்கு மாபெரும் ஆரத்தி எடுக்கும் நிகழ்வில் வைகை நதிக்கு கற்பூரம் காட்டி பின்பு அடுக்கு தீபம், கும்ப தீபம், நாகதீபம், ஒரு முகதீபம். தூபம் (சாம்பிராணி) என 5 வகையான ஆரத்திகள் கொண்டு மதுரை வைகை நதி வளமாக இருக்க வேண்டும் என்று ஆரத்திகள் காட்டப்பட்டது. பின்பு அங்குள்ள பக்தர்களுக்கும் ஆரத்திகள் காட்டப்பட்டது. மேலும் அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆர்வமாக மதுரை வைகை ஆற்றிற்கு மகா ஆரத்தி எடுத்தனர்.



 

 


இது குறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், ‘உலக நன்மைக்காக ஆற்றுத்திருமுழுக்கு ஆரத்தி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள். இந்த விழா மிகச் சிறப்புடையதாக கருதப்படுகிறது” என்றனர்.