அழகர்கோயில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோயில் தேரோட்டம் வெகு சிறப்பாக தொடக்கம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணை முட்டும் வகையில் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

 

கள்ளழகர் திருக்கோயில்

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், தென் வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாக அழகர்கோயில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் திகழ்ந்து வருகின்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பல்வேறு உற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், சித்திரை மாதம் வைகையாற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் ஶ்ரீ கள்ளழகர் எழுந்தருளும் சித்திரை திருவிழாவும், ஆடி மாத பௌர்ணமியை யொட்டி நடைபெறும், திருத் தேரோட்டமும் முக்கிய திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, இந்த ஆண்டிற்கான 10 நாட்கள் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 


 

120 அடி நீளம் கொண்ட திருத்தேர்

 

தினமும், சுவாமி ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியருடன் சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைப்பெறுவதைத்யொட்டி, உற்சவ மூர்த்தியான ஶ்ரீ கள்ளழகர் மற்றும் ஶ்ரீதேவி,பூதேவியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் வண்ண திரைத்துணிகளால் அலங்கரிக்கப்பட்ட, 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் ஶ்ரீ கள்ளழகர் ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியருடன் சமேதராக எழுந்தருளப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, கிராம நாட்டார்கள் மற்றும் உபயதாரர்கள் வெள்ளை வீசியதைத் தொடர்ந்து, கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா கோவிந்தா என்று விண்ணை முட்டும் வகையில் கோஷத்துடன், 120 அடி நீளம் கொண்ட திருத்தேர் வடத்தை பிடித்து தேரை இழுக்க தொடங்கினர்.

 

தானியங்களை திருக்கோயிலில் செலுத்தி வழிபாடு

 

இந்த, திருத்தேரோட்டதையொட்டி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தல் பேரில், திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர் கலைவாணன் தலைமையில் பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பறை, மருத்துவ உதவி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், இந்த ஆடிப் பெருந்திருவிழாவில், தென் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்துக் கொள்ளும் நிலையில், தங்களது பகுதியில் மழை பொழிந்து, விவசாயம் செழிக்க வேண்டி, தாங்கள் விளைவித்த நெல், உள்ளிட்ட பல்வேறு தானியங்களை திருக்கோயிலில் செலுத்தி வழிபடுவர் என்பது குறிப்பிடதக்கது.