காவல் நிலையத்தில் வைத்து வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி வழக்கு.

 

வழக்கறிஞர் மீது தாக்குதல்

 

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகுமாரன் தாக்கல் செய்த மனு. மேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற, "தன்னை தாக்கிய துணை காவல் கண்காணிப்பாளர் DSP  மீது மேலூர் நீதித்துறை நடுவரின் உத்தரவின் அடிப்படையில், மேலூர் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி புகழேந்தி, “வழக்கறிஞர் கடந்த 2022 ஆம் ஆண்டு உதவி காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையம் முன்பாக வைத்து தாக்கியுள்ளார். இது தொடர்பாக மேலூர் காவல் நிலையத்தில் மனுதாரர் புகார் அளித்துள்ளார். இருப்பினும் வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில், மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் மேலூர் நீதித்துறை நடுவர் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

ஐ.ஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 

ஒரு வழக்கறிஞர் காவல் நிலையத்தில் வைத்து தாக்கி உள்ள சூழலில் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த வழக்கை முறையாக மேலூர் காவல்துறை ஆய்வாளர் விசாரணை செய்யவில்லை எனவே இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

 

இந்நிலையில், ஐ.ஜி அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.  அதில், "உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  உடனடியாக வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டது. 

இதில் ரவிக்குமார், உதவி ஆணையர் ஆர்.எஸ்.புரம் மண்டலம், கோயம்புத்தூர் தற்போது பணிபுரிந்து வருகிறார் ராஜபாளையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் சார்லஸ் மற்றும்  காவலர்கள் கஜேந்திரன், பேரையூர் காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் ஜெயம் பாண்டியன் உள்ளிட்டோர் மீது 166, 294(b), 323, 506(i) IPC உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு வழக்கு பதிய  காலதாமதம் செய்த மேலூர் காவல் ஆய்வாளர் மன்னவன் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அக்காலகட்டத்தில் காவல் நிலைய அலுவலராக செயல்பட்டவர் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஐ.ஜிக்கு பாராட்டு

 

இதனை பார்த்த நீதிபதி தென்மண்டல காவல்துறை தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததை இந்த நீதிமன்றம் பாராட்டுகின்றது.  காவல்துறையிடம் புகார் அளித்தால் தங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என காவல்துறையின் மீது சாமானிய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் வழக்கறிஞரை துணை காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையம் முன்பாக வைத்து தாக்கியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டே ஆறு மாதங்கள் ஆகியும், காவல்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுமில்லை. உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை பொதுமக்களிடையே காவல்துறை அதிகாரிகள் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டால், அதில் தங்களுக்கு நீதி கிடைக்காது எனும் எண்ணத்தை உருவாக்கி விடுகிறது. தவறு செய்த  காவலர்கள்  மீது உரிய நடவடிக்கையை எடுத்து, காவல்துறையின் கௌரவத்தை பாதுகாத்ததற்காக தென் மண்டல காவல்துறை தலைவருக்கு நீதிமன்றம் மீண்டும் பாராட்டுகளை தெரிவிக்கிறது. என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.