களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்,  உள்ளிட்ட பகுதிகளில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கு

பொதுநல வழக்கு
 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியை சேர்ந்த கரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " தென் தமிழகத்தின் வனப்பகுதிகளில் திடக்கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது.  இவ்வாறு திடக்கழிவுகள் கொட்டப்படுவது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல. திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் வனப்பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகள் சிறப்பு பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன அப்பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டால் சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையை, குப்பை கொட்டுவோரிடமிருந்து வசூலிக்கலாம்.
 
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
 
எனவே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம், கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம், குமரி மாவட்ட வனவிலங்கு சரணாலயம், கடவூர் தேவாங்கு சரணாலயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் திடக்கழிவு கொட்டப்பட்டதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் சேதங்களை மதிப்பீடு செய்ய நிபுணர் குழுவை அமைக்கவும், சம்பந்தப்பட்டோரிடம் சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கவும், ஆய்வுகளை நடத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
 
வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேறு அமர்வுக்கு மாற்றம்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, "வழக்கு தொடர்பாக தமிழக வனத்துறை, பொதுப்பணித்துறை,  முதன்மைச் செயலர்கள்,  தமிழக தலைமை வன பாதுகாவலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்  அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.