தமிழகத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டை முற்றிலுமாக ஒழித்து, சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரிய வழக்கு.

பொதுநல வழக்கு
 
மதுரை மேலூரைச் சேர்ந்த தங்கச்சாமி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " தமிழகத்தில் உள்ள சிறு, குறு நெல் விவசாயிகள் போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாததாலும், இடைதரகர்களின் தலையிட்டால் சட்டவிரோதமாக கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணத்தாலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டை முற்றிலுமாக ஒழித்து, சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும்.
 
50% லாபம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை
 
மேலும் மத்திய, மாநில அரசுகள் ஒரு நிபுணர் குழுவை அமைத்து, தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப செலவுகளோடு 50% லாபம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் " எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, "மனுதாரர் வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யாமல், மேலோட்டமாக கேட்கும் கோரிக்கை வழங்க இயலாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.