ரூ.53 லட்சம் மதிப்பிலான 10 வளர்ச்சிப் பணிகளை திறந்து வைத்தார் சு.வெங்கடேசன் தமிழகத்திற்கு நிலுவை நிதிகளை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தல்.
வளர்ச்சிப் பணிகள்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.53 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்ட 10 வளர்ச்சிப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு பணிகளை திறந்து வைத்தார்.
திறந்து வைக்கப்பட்ட பணிகள்:
வார்டு 58 – மஞ்சளமேடு காலனி சமுதாயக்கூடம்
வார்டு 59 – அம்பேத்கர் நகர் சிண்டெக்ஸ் குடிநீர் வசதி
வார்டு 59 – காந்திஜி காலனி சிண்டெக்ஸ் குடிநீர் வசதி
வார்டு 77 – சுப்பிரமணியபுரம் மார்க்கெட் உயர் மின் கோபுரம்
வார்டு 75 – எம்.கே.புரம் உயர் மின் கோபுரம்
வார்டு 83 – சோலையழகுபுரம் 2-வது தெரு, ராமமூர்த்தி நகர் சந்திப்பு உயர் மின் கோபுரம்
வார்டு 82 – சோலையழகுபுரம் 3-வது தெரு, மடப்புரம் காளிகோவில் சந்திப்பு உயர் மின் கோபுரம்
வார்டு 75 – தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி அருகே உயர் மின் கோபுரம்
வார்டு 73 – அழகப்பன் நகர் ரயில்வே கேட் சந்திப்பு உயர் மின் கோபுரம்
வார்டு 73 – அழகப்பன் நகர் – பாலாஜி நகர் சந்திப்பு, முத்துப்பட்டி மெயின் ரோடு உயர் மின் கோபுரம்.
பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் கூறியதாவது:
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொகுதி மேம்பாட்டு நிதி மிகப் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சமமாக பகிர்ந்தளித்து மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்றைய முன்தினம் மேலூர் தொகுதியில் நிறைவு பெற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்ட நிலையில், நேற்று மாநகராட்சி பகுதிகளில் 10 பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றார்.
தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி நிலுவைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தமிழகத்திற்கு வரி பகிர்மானம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வழங்கப்பட வேண்டிய நிதிகள் இன்னும் நிலுவையில் உள்ளன. குறிப்பாக கல்வித் திட்டங்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதிகளை ஒன்றிய அரசு தனது கொள்கைகளை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நிறுத்தி வைத்துள்ளது. அந்த நிதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றார்.
