தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  ரூபாய் 430 கோடி செலவில் நடைபெற்று வரும் மதுரை ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு செய்தார். மறு சீரமைப்பு பணிக்கான விளக்கப் படங்களை பார்வையிட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 

 





இந்த ஆய்வில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் ஜிங்கர், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் திட்ட அதிகாரி கமலாகர ரெட்டி, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, துணை முதன்மை பொறியாளர் நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பேசும்போது, மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் 36 மாதங்களில் நிறைவடையும், அதற்கான பணிகள் 2அல்லது3 மாதங்களில் நிறைவடையும் எனவும், பழமை மாறாமல் ரயில் நிலையம் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மதுரை ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்காமல் தவிர்க்க மதுரை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 



ஆய்விற்கு பின்பு மதுரை கோட்ட அலுவலகத்தில் ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின்பு மதுரை - நாகர்கோவில் இடையே நடைபெறும் இரட்டை அகல ரயில் பாதைகள் மற்றும் பணிகளை சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்தார். வெள்ளிக்கிழமை (09.12.2022) அன்று ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகள், புதிய பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்ட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய இருக்கிறார்.