தனியார் பள்ளிகளை போல குக்கிராம பகுதி மாணவிகளுக்கான பிரத்யேக பேருந்துகள் இயக்கத்தால் நெருக்கடியின்றி வீடுகளுக்கு செல்லும் மாணவிகள்.


அரசு மாதிரி பெண்கள் பள்ளி


மதுரை மாவட்டம் உலகனேரி பகுதியில் உள்ள யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை தொடங்கி புதுப்பட்டி, திருவாதவூர், மேலூர், வரையிலும் மாநகர் பகுதிகளான புதூர், கடச்சனேந்தல், சர்வேயர் காலனி பகுதி என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவிகள் மாதிரி பள்ளியில் படித்து வருகின்றனர்.


இந்நிலையில் பள்ளி முடிந்து புறநகர் பகுதிகளான புதுப்பட்டி, மேலூர், அரும்பனூர், திருவாதவூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மாணவிகள் பேருந்துகளில் செல்வதற்காக பள்ளி முன்பு காத்திருக்கும் போது பள்ளியில் பணி புரியும் ஒப்பந்த பணியாளரான பாண்டியம்மாள் ஒவ்வொரு ஊர்களுக்கும் செல்லும் அரசுப் பேருந்துகளை சாலையில் சென்று கையை நீட்டி நிறுத்தி, எங்க ஸ்கூல் பிள்ளைங்கள கூப்டு போங்க என மடக்கி ஒவ்வொரு பேருந்துகளிலும் மாணவிகளை பத்திரமாக அனுப்பி வைத்து வருகிறார்.


சூதானமா கூட்டிப் போங்க


மேலும் பேருந்துகளில் படிக்கட்டுகளில் மாணவிகள் நிற்க கூடாது எனவும் எங்க புள்ளைங்கள பத்திரமா வீட்டில கொண்டு போய் இறக்கி விடுங்க. பாதியில எங்கே இறக்கிவிட்டு விடக்கூடாது. பார்த்து சூதானமா கூட்டிட்டு போங்க, என நடத்துனரிடம் பாட்டி உரிமையோடு கூறி அனுப்பிவைக்கிறார். கூட்டமாக நிற்கும் மாணவிகள் மத்தியில் ஓடோடிசென்று பஸ் கண்ட்ரகடர் போல புதுப்பட்டி, மேலூர், அரும்பனூர், திருவாதவூர் போறங்களா இந்த இந்த பஸ்ல ஏறுங்க என ஒவ்வொரு பஸ்சாக நிறுத்தி பத்திரமாக அனுப்பிவைக்கிறார்.


ஒவ்வொரு பேருந்தையும் சாலையில் சென்று ஓரங்கட்டு, ஓரங்கட்டு புள்ளங்க நிக்குறாங்க என கூறி ஒதுக்கி மாணவிகளை ஏற்றி அனுப்பி வைக்கிறார். பேருந்துக்குள் மாணவிகளை, அமரவைத்து நிற்கவைக்கும் பாட்டி பாண்டியம்மாள் படியில் யாரும் நிக்காத பத்திரமாக உள்ள போய் நில்லு. என பெயரளவிற்கு ஒரு குச்சியை வைத்துக்கொண்டு பேருந்தில் ஏறுவதும் இறங்குவதும் என சுறுசுறுப்பாக துறுதுறுவென துள்ளலாக செயல்படுகிறார். ஒற்றை ஆளாக நின்று அத்தனை மாணவிகளை அந்தந்த அரசு பேருந்துகளிலும், மினி பஸ்களிலும் , ஷேர் ஆட்டோக்களிலும் பத்திரமாக அனுப்பிவைக்கும் பாட்டி பாண்டியம்மாளுக்கு மாணவகளின் ரசிகர்கள் பட்டாளாமே உள்ளது.


மரங்களை பாதுகாத்து வருகிறார்


புதுப்பட்டி, மேலூர், அரும்பனூர், திருவாதவூர் ஆகிய பகுதிகளுக்கு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான பிரத்யேகமாக அமைச்சர் மூர்த்தியின் முயற்சியால் தனியார் பள்ளி வாகன பேருந்துகளைப் போல மாணவிகளுக்காக மட்டும் பிரத்தியேகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் எந்த பயணிகளும் அனுமதி இல்லை என்ற அடிப்படையில் மாணவிகள் மட்டும் அந்தந்த குக்கிராமங்களுக்கு  செல்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் பாட்டி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள செடிகளை பராமரிப்பதற்காக ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு வந்து தற்பொழுது 15 ஆண்டுகளாக பணிபுரிந்து அங்கு பயிலும் மாணவிகளை பாதுகாத்து வரும் பாட்டியாக உருவெடுத்திருக்கிறார். தற்போது 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றாலும் படிக்கும் பிள்ளைகளை தன் வீட்டு பிள்ளைகள் போல பார்த்து பராமரித்து அனுப்பி வைப்பதில் எனக்கு எப்போதும் சந்தோஷம் தான் என தெரிவிக்கிறார். மேலும் பாண்டியம்மாள் பாட்டி பள்ளியில் உள்ள அனைத்து மரங்களையும் பராமரித்து பாதுகாத்து வளர்ப்பது மாணவிகளையும் பாதுகாத்து வருகிறார்