பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க, மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அறிமுகம் செய்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 டிசம்பர் மாதம் பிரச்சாரத்தை தொடங்கினார். நல்ல முன்னெடுப்பு என பலரும் அதை பாராட்டி வரவேற்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்திற்கு மஞ்சப்பை விருது 2023-2024-க்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

 


 


 

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில், “மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு 'மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு. முதல் பரிசாக ரூ.10 இலட்சமும். இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 இலட்சமும் வழங்கப்படும்.

 


 

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள்/ கல்லூரிகள் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் http//madurainic.in பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

 

குறிப்பு: 1) விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். 21 கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (CD) பிரதிகள் இரண்டினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மஞ்சப்பை விருது 2023 2024-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 1.5.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அவர்கள் தெரிவித்துள்ளார்.