மதுரையில் பால் டெப்போக்களுக்கு ஆவின் பால் விநியோகம் தாமதம் - ஆவின் பால்பண்ணையை முற்றுகையிட்டு பால் வாகனங்களை திருப்பி அனுப்பிய டெப்போ முகவர்கள்.

 


பால் விநியோக தாமதத்தால் முகவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர் - அதிகாரிகள் போன் எடுப்பதில்லை என முகவர்கள் குற்றச்சாட்டு.

 


தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறது. இதில் மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியிலுள்ள ஆவின் மத்திய பால்பண்ணையில் இருந்து நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் ஆவின் பால் பாக்கெட்டுகள் டெப்போக்கள்  மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 



 



 

 

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) நிர்வாகத்தில் தினசரி 1.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சாத்தமங்கலம் ஆவின் மூலம் நாள் ஒன்றுக்கு 1.93 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் மதுரை நகர் மற்றும் புறநகர் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு ஆவின் பால் டெப்போக்கள  மூலமாக பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் விநியோகம்  தாமதமாக விநியோகம் செய்யப்படுவதால் முகவர்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.

 


 

மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான கரிசல்குளம், விளாங்குடி, கூடல்நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ச்சியாக காலை 6 மணிக்கு மேல் ஆவின் பால் டெப்போக்களுக்கு தாமதமாக பால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறி அப்பகுதிகளை சேர்ந்த ஆவின் டெப்போ முகவர்கள் மதுரை சாத்தமங்கலம் ஆவின் மத்திய பால்பண்ணையை முற்றுகையிட்டு தாமதமாக புறப்பட்ட பால் வண்டிகளை மீண்டும் ஆவினுக்கு திருப்பி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது பேசிய முகவர்கள்: பால் பாக்கெட்டுகளுக்கான பணத்தை செலுத்த சில நிமிடங்கள் தாமதமானாலும் பணத்தை வாங்க மறுக்கிறார்கள். ஆனால் பால் முகவர்களுக்கு மட்டும் பால் பாக்கெட்டுகளை தாமதமாக விநியோகம் செய்வதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. 

 


 

இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தால் அவர்களுக்குள்ளாகவே மாறி மாறி குறை கூறுகின்றனர். ஆனால் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மேலும் புகார் அளித்தால் போன் எடுக்கவே மாட்றாங்க. இதனால் பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாததால் இப்போ  வண்டிய திருப்பி அனுப்புறோம். ஆவின் பால் தாமதத்தால் டெப்போ முகவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றோம் எனத் தெரிவித்தனர்.