தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவரான பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள் இரா.அருள் (சேலம் வடக்கு), எம்.கே.மோகன் (அண்ணா நகர்), பெ.ராமலிங்கம் (நாமக்கல்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திருச்செந்தூர் வந்த குழுவினர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து குழுவினர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ 300 கோடி செலவில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப்பணிகளையும், அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதிப் பணிகள் மற்றும் அன்னதானக் கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



 

பின்னர் குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்துள்ளோம். அறநிலையத்துறை சார்பில் ரூ. 100 கோடி செலவிலும் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடி செலவிலும் 2022 முதல் 2025 வரை நான்கு கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதிப்பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பணி நிறைவு பெற்ற பின் முதல்வரால் திறந்து வைக்கப்படும். இங்கு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற பிறகு இந்திய அளவில் எல்லா வசதிகளும் நிறைந்த திருக்கோயிலாக திருச்செந்தூர் கோயில் இருக்கும். அதன் மூலம் பக்தர்கள் இலகுவாக சுவாமி தரிசனம் செய்ய முடியும். கிழக்கு கடற்கரை சாலைத்திட்டம் மூலம் நாகப்பட்டினம் முதல் இங்கு வரை வருவதற்கான சூழல் உள்ளது. மேலும் திருச்செந்தூர் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைப்பது குறித்தும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு, இந்த திட்டத்தின் சாத்தியம் குறித்து அறிவிக்கப்படும்.



 

பக்தர்களை உள்ளுர், வெளியூர் என இனம் காண முடியாது. உள்ளுர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது குறித்து அரசிடம் வலியுறுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தரிசனம் செய்வதற்கு கோயில் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது. திருக்கோயிலில் ஒரே நேரத்தில் 300 கோடி செலவில் பணிகள் நடப்பதால் பக்தர்களுக்கு பல்வேறு சிரமம் ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் பேருந்துநிலையம் வரை பேருந்துகள் வந்து செல்வதற்கு குழு உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்றார் அவர். தொடர்ந்து குழுவினர் உடன்குடி கல்லாமொழி பகுதியில் நடைபெற்று வரும் அனல்மின் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, சட்டப்பேரவை குழு செயலர் கி.சீனிவாசன், இணை செயலர் மு.கருணாநிதி, தூத்துக்கடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார், திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், கோட்டாட்சியர் குருச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் மு.வசந்த்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



 

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளின் நிலை குறித்து குழுவினர் கேட்டறிந்து, பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினர்.

 





இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு