மதுரையை சனாதன மையமாக மாற்றப் பார்க்கிறார்கள்; உண்மையான தமிழ் தேசியம் என்பது சனாதன எதிர்ப்பே - திருமாவளவன் பேச்சு.
மதுரையில் திருமாவளவன்
மதுரையில் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் எழுதிய "கருப்பு ரட்சகன்" நாவல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், இயக்குநர்கள் வெற்றிமாறன், சரவணன், நடிகர் சசிக்குமார் உள்ளிட்ட பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள், தொண்டர்கள், அமைப்பினர் பங்கேற்றனர். நிகழ்வில் திருமாவளவன் பேசுகையில்...,"தேர்தல் களத்தில் நான் எடுக்கிற முடிவுகள் வெளியில் உள்ளவர்கள் பார்வையில் சில நேரத்தில் பிழையாக இருக்கலாம். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த போது நான் திமுக கூட்டணியில் தொடர்ந்ததை சிலர் இன்றும் விமர்சிப்பதை பார்க்கிறேன். வேங்கைவயல் உள்ளிட்ட பல தலித் மக்கள் பிரச்சனைகளின் போது எனக்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தது உண்டு. இன்றைக்கும் வேங்கை வயலுக்கு திருமா என்ன செய்து விட்டார் என்ற கேள்வி உண்டு. சம்பவம் நடந்த இரண்டாம் நாளே போராட்டம் அறிவித்து, உடனடியாக நடத்தினேன். பத்துக்கும் மேற்பட்ட முறை முதலமைச்சர், தலைமை செயலாளரிடம் நான் பேசினேன்.
பதவி ஆசை இல்லாததே காரணம்.
கூட்டணி என்பதற்காக உரிமைகளை விட்டுக்கொடுத்து மக்களை மறந்து தனி நபராக என்னுடைய நலன் குறித்து நான் சிந்தித்தது இல்லை. அப்படி எந்த முடிவையும் நான் எடுத்ததில்லை. இந்த ஆட்சியில் அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக எங்களை போல் போராடியவர்கள் யாருமில்லை. கலைஞர் காலத்திலும் கூட்டணியில் இருந்த போதும் அவருக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற நிலையில்லாமல், அதிமுக தலைவர்களோடு இயங்கியிருக்கிறேன். மதுரையை சனாதன மையமாக மாற்ற பார்க்கிறார்கள். சாதி சங்கங்களை அணுகி சாதி உணர்வுகளை திட்டமிட்டு வளர்க்கிறார்கள். ஜனநாயக உணர்வை சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக சாதி, மத உணர்வுகளை தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல். நான் தேர்தல் நேரத்தில் மட்டுமே தேர்தலை பற்றி பேசுவேன். சீட் எத்தனை பெறுகிறேன் என்பது என் பிரச்சினையல்ல. சீட் எண்ணிக்கை மாறுவதால் நான் முதலமைச்சர் நாற்காலியில் போய் அமர போவதில்லை. பதவி எனக்கு பெரிதல்ல. 10 சீட் கூடுதலாக வாங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. சீட் தான் வேண்டும் என்றால் அதை அதிகமாக தருகிற கட்சியோடு போய் சேரலாம் அல்லவா. இவ்வளவு விமர்சனங்களுக்கு பின்னரும் திமுக கூட்டணியில் தொடர்வதற்கு காரணமே பதவி ஆசை இல்லாததே காரணம்.
வலதுசாரிகளின் ஆதிக்கத்தால் இந்த விளைவுகள் உருவாகி வருகிறது
பெரியாரை வெளிப்படையாக, பிராமண கடப்பாறையை கொண்டு இடிப்போம் என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது. வலதுசாரிகளின் ஆதிக்கத்தால் இந்த விளைவுகள் உருவாகி வருகிறது. சகோதரத்துவத்தை தகர்க்க பார்க்கிறார்கள். உண்மையான தமிழ் தேசியம் என்பது சனாதன எதிர்ப்பில் தான் அடங்கியிருக்கிறது. மத வழி தேசியத்தை எதிர்ப்பது தான் உண்மையான தமிழ் தேசியம். இந்தியா முழுமைக்கும் ஒரே மதம் தான் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் அரசியல். அதை எதிர்ப்பதற்கான ஆயுதமாக நாம் முன்வைக்கும் பெரியாரையே இல்லாமல் ஆக்குவோம் என சொல்வது ஆபத்தான விஷயம்" என்றார்.