உசிலம்பட்டி அருகே சர்வதேச தந்தையர் தினத்தில் தந்தை இறந்த சோகத்தில் மகனும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலைக்குறைவு காரணமாக விவசாயி உயிரிழப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி. விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் ராமையா, உத்தப்புரம் 2ஆம் எண் நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் சூழலில் பணி நிமித்தமாக சமத்துவபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை உடல்நலக்குறைவு காரணமாக தந்தை பால்சாமி இறந்துவிட தந்தை இறந்த செய்தியை அறிந்த ராமையா நேரில் வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத போது மயங்கி விழுந்தாகவும், மயங்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தில் அப்பா - மகன் இறப்பு
இதனைக் கேட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இருவரது உடலையும் தும்மக்குண்டு பெருமாள்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று சர்வதேச தந்தையர் தினம் அனுசரித்த சூழலில் தந்தை இறந்த சோகத்தில் மகனும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.