மதுரை மாநகரில் பெய்த கனமழை மாலை 3 மணி முதல் 3.15 வரை -  15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் மழைப்பொழிவு - காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானது - மழை பாதிப்பின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி கோரிக்கை

 

பல இடங்களில் கனமழை


 

மதுரை மாவட்டம் முழுவதிலும் மதியம் முதல் மாலை வரை மூன்று மணி நேரத்திற்கு மேலாக திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. இதில் மதுரை மாநகராட்சி 10வது வார்டு பகுதியான பாரத் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளுக்குள் முழுவதிலும் மழை நீர்சென்று குடியிருப்புகள் மூழ்கியது  ஒவ்வொரு பகுதிகளிலும் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கிய நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகினர். தாழ்வான பகுதியான பாரத் நகர் பகுதியில் கண்மாய் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி பலமுறை அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் திடீரென பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஓடைகளில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானர்.மேலும் இரவு நேரங்களிலும் தண்ணீர் வழியாத நிலையில் மேடான பகுதிகளுக்கு சென்று தங்கும் நிலை உருவானது. திடீரென பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வீணானது. இதேபோன்று பாரத் நகர் பகுதியில் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதிலும் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் மூழ்கடித்தது.

 

4.5  சென்டிமீட்டர் மழை

 

மாவட்டத்தில் 3 மணி முதல் 3;15 மணி வரை திடீரென 4.5  சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதோடு பல்வேறு  குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மதுரை மாநகரப் பகுதியில் மதியம் 2.15 மணி வரை எந்தவித அறிகுறியும் இல்லாத நிலையில் சில நிமிடங்களில் வானம் மேகமூட்டம் உருவாகி 15 நிமிடத்தில்  மதுரை மாநகரையே புரட்டிப் போடும் வகையில் மழை அடித்து நொறுக்கியது. கனமழையால் மாசி வீதிகளில் தீபாவளி வியாபாரத்தை நம்பி இருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை  புரட்டிபோட்டது. 

 

நடவடிக்கை எடுக்க மதுரை எம்.பி கோரிக்கை


 

இன்று காலை 8:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மதுரை மாவட்டத்தில் 9.5 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. எனவே மழை பாதிப்பின் தீவிரத்தை தணிக்கை போர்க்கால அடிப்படையில் அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது X தளத்தின் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக திடீரென பெய்த கன மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகள் மழைநீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.