சென்னை, திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள சட்டவிரோத ஆயுத வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

 

மதுரை சேர்ந்த கார்மேகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 2018-ல் தாக்கல் செய்த மனு. அதில், "சென்னை மற்றும் திருச்சியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் உட்பட பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், தங்கள் இயக்கத்துக்கு நிதி சேர்ப்பதற்காக சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இவர்கள் தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூரில் முன்னணி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்குகளை தமிழக போலீஸார் நியாயமாக விசாரிக்க வாய்ப்பில்லை. எனவே, சென்னை, திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள சட்டவிரோத ஆயுத வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தனர்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

 

* சட்டவிரோத ஆயுதங்கள் பயன்பாடு என்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது. இதை தடுக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. 

 

* ஆயுத சட்டத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆபத்தான ஆயுதங்கள் பொதுமக்களிடம் குறிப்பாக சமூக விரோதிகளிடம் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
  

 

* சுய பாதுகாப்புக்கு ஆயுதம் வைக்க உரிய அதிகாரியிடம் உரிமம் பெற வேண்டும். ஆயுத உரிமம் வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரின் முன்நடத்தை, வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது உட்ப்பட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. 

 

* உரிமம் பெறாத ஆயுதங்கள் பயன்பாட்டை முழுமையாக தடுக்க வேண்டும். 

 

* இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுவில் விசாரணை முறையாக நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகள் அறிக்கை திருப்தியாக உள்ளது. 

 

* இதனால் சென்னை, திருச்சியில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத ஆயுத வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டியதில்லை. 

 

தமிழக போலீஸார் சட்டவிரோத ஆயுத வழக்குகளின் விசாரணையை குறைபாடு இல்லாமல் முழுமையாக விரைவில் விசாரிக்க வேண்டும். விழிப்புடனும், கண்காணிப்புடனும் இருந்து சட்டவிரோத ஆயுத பயன்பாட்டை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.