திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான அமைதி கூட்டத்தில் அ.தி.மு.க., கலந்து கொண்டதாகவும், கையெழுத்துபோட மறுத்துவிட்டதாகவும், உண்மைக்கு புறம்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தாங்கள் வெளிட்ட அறிக்கையினை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிக்கை வெளியிட்டிருந்தார். குறிப்பாக அதில், ‘திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த 30.01.2025 அன்று உள்ளூரைச் சேர்ந்த மேற்படி நபர்களை (சி.பி.எம், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட், திர்ணாமுல் காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய முஸ்லீம் லீக், வி.சி.க. கட்சியின் பிரதிநிதிகள்) அழைத்து ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. மேற்படி அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் "திருப்பரங்குன்றம் நகரை சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை (தனிப்பட்ட முறையில் கந்தூரி கொடுப்பதை) தொடர்ந்து பின்பற்றவும், அதில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என அனைவரும் (அ.இ.அ.தி.மு.க பிரதிநிதி மட்டும் கையொப்பம் இட மறுப்பு தெரிவித்து சென்றுவிட்டார்) தெரிவித்துக் கொள்கிறோம், என எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்” என்று ஆட்சியர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அ.தி.மு.க., சார்பில் மனு
இந்தநிலையில் மதுரை அ.தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளாக கருதப்படும் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், ‘மதுரை திருப்பரங்குன்றத்தில் சில நாட்களாக நடைபெற்று வரும் பிரச்சனையையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவராகிய தாங்கள் ஒரு அறிக்கை 05-02-2025 அன்று வெளியிட்டு உள்ளீர்கள். அந்த அறிக்கையில், திருமங்கலம் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைதிக்கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. பிரதிநிதி மட்டும் கையொப்பம் இட மறுப்பு தெரிவித்து சென்று விட்டார் என்று தெரிவித்துள்ளீர்கள்.
ஆட்சியர் கூறுவது எப்படி ஏற்புடையதாகும்
ஆனால், (ராஜன்செல்லப்பா) - திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டக் கழகச் செயலாளர் என்ற முறையில் எனக்கும், மேலும் மற்ற மக்கள் பிரதிநிதிகளான மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்டக் கழகச் செயலாளர் செல்லூர் கே. ராஜூ அவர்களுக்கும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை, என்ற தகவலை தங்களிடம் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அதிமுக சார்ந்த மற்ற மாவட்ட கழக நிர்வாகிகள் யாருக்கும் அமைதிக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அழைப்பு விடுக்காததால் நாங்கள் செல்லாத கூட்டத்தில், கையெழுத்து இடாமல் வெளியேறினோம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறுவது எப்படி ஏற்புடையதாகும் என்ற கேள்வியை முன்வைக்க விழைகிறோம்.
அறிக்கையினை திரும்பப் பெற வேண்டும்
சட்டம் ஒழுங்கு சம்பந்தமான மக்கள் பிரச்சனைகளுக்கு அண்ணா.தி.மு.க மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்காமல் அமைதிக்கூட்டத்தை நடத்தியதோடு அல்லாமல், உண்மைக்கு புறம்பான தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ளார் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அண்ணா.தி.மு.க. ஜாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம். அண்ணா.தி.மு.க. மீது வீண்பழி சுமத்த வேண்டும் என்ற முயற்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பலியாகிவிட்டாரோ என்று கருத வேண்டியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாகவும், இன்றைய பிரதான எதிர்க்கட்சியாகவும் உள்ள அனைத்திந்திய அண்ணா.தி.முக.விற்கு அழைப்பு விடுக்காமல் அமைதிக்கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் அண்ணா.தி.மு.கவினர் கலந்து கொண்டதாகவும், கையெழுத்துபோட மறுத்துவிட்டதாகவும், உண்மைக்கு புறம்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தாங்கள் வெளிட்ட அறிக்கையினை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.