மதுரை மாவட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு
 
மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில் இன்று (16.03.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தெரிவித்ததாவது...” தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிற்கிணங்க வருகின்ற 30.03.2026 முதல் கெஜட் நோட்டிபிகேஷன் வழங்கப்படும். 06.04.2026 வரை வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் 07.04.2026  வேட்பு மனு ஸ்குருட்டினி நடக்கும். 09.04.2026 வரை வேட்பு மனுதாக்கல் திரும்பப் பெறலாம். 
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
 
தேர்தல் ஆணையம் 15.03.2026 அன்று அறிவித்த அறிவிப்பிற்கிணங்க மாவட்ட நிர்வாகம் சார்வில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 சட்ட மன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 9 பறக்கும் படைகள் என மொத்தம் 90 பறக்கம் படைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்களை சோதனை செய்வதற்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 சுழற்சி அடிப்படையில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 9 என்ற அடிப்படையில் 90 நிலையான கண்காணிப்பு குழு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிப்பதற்கு வீடியோ கண்காணிப்புக்குழு போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 100 சதவீதம் வெப்காஸ்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் 10 சதவீதத்திற்கு கீழ் வாக்குப்பதிவாகிய வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3079 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிற்கிணங்க வாக்குச்சாவடி மையங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது மேற்கு சட்டமன்ற தொகுதியில் சாந்தி சதன் என்ற குடியிருப்பில் புது வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
மதுரை சிறைச்சாலையில் இருப்பவர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது
 
முதல் முறையாக வாக்களிக்கும் குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும். மதுரை மாவட்டத்தில் உள்ள 3079 வாக்குச்சாவடி மையங்களில் 3691 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் உட்பட மொத்தமாக 14764 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணி (Polling Officials) பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தைத் சேர்ந்த இராணுவத்தில் வேலை செய்யக்கூடிய 5232 சர்வீஸ் வாக்காளர்களுக்கு ஈடிபிவிஎஸ் மூலம் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 85 வயதுக்கு மேற்பட்ட  1159 வாக்காளர்கள், 891 மாற்றுதிறனாளிகள்  விண்ணப்பித்து வீட்டிலிருந்து வாக்களிக்க அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மதுரை சிறைச்சாலையில் இருப்பவர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அதேபோல் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் தொலைப்பேசிகளை வைப்தற்கும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேர்தல் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடைய அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 18004254268 என்ற எண்ணை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். ரூபாய் 10 இலட்சத்திற்கு மேல் எந்த வித ரசீதுமின்றி எடுத்துச்செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்வதற்கும், தகவல்களை வருமானவரித்துறைக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
 
Voter Turnout மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
 
அனைத்து வங்கி அலுவலர்களும் ஏடிஎம் -களில் பணம் செலுத்துவதற்கு பணத்தை கொண்டு செல்ல எந்த வங்கி எந்த கிளை என்பதற்கான தகவல்களை QR Codeல் தயார் செய்து கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதனை அறிவதற்காக Voter Turnout மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 40 -ற்கு மேற்பட்ட மொபைல் செயலிக்கு பதிலாக ஒரே மொபைல் செயலி ECI Net மூலம் அனைத்து பொதுமக்கள் மற்றும் கட்சியாளர்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள் சுவிதா 2.0 என்ற மொபைல் செயலி மூலம் தங்களுடைய அனுமதி வேண்டி விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்ஸம் மொபைல் செயலி போன்றவை இந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் பயன்படுத்தலாம். மேலும் பெண்கள் மட்டும் வாக்களிப்பதற்கு பிங்க் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது" என தெரிவித்தார்.