தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் அரசு சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கான அனுமதி தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
 
மதுரை 2025 ஜல்லிக்கட்டு போட்டிகள்
 
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என பொங்கல் அன்று முதல் தொடர்ச்சியாக நடைபெறும். தற்போது கூடுதலாக அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி கீழக்கரை பகுதியிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் அரசு சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கான அனுமதி தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
 
 

மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் காண ஆசை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியினை 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கடந்த ஆண்டு நேரில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் மதுரை அலங்காநல்லூர், கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியினை நேரில்சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடு செய்து தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர்  கோரிக்கை மனு அளித்தனர்.
 

அனுமதி சீட்டு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை 250 பேர் வீதம் சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும் எனவும், இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் வளர்க்கக்கூடிய காளைகளுக்கான அனுமதி சீட்டு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
 

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

 
இதுகுறித்து தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் பேசியபோது, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை கடந்த ஆண்டு சிறப்பாக பார்வையிட்டோம். அதேபோன்று இந்த ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியினை காண்பதற்கு மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை 250 பேர் வீதம் சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும். இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் வளர்க்கக்கூடிய காளைகளுக்கான அனுமதி சீட்டு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.