உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நடைபெறாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த வைபோகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக குவிந்தனர்.




இந்த பிரம்மாண்ட திருவிழாவில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை நோக்கிவந்த கள்ளழகர் இன்று காலை வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள். புடை சூழ வைகையாற்றில் எழுந்தருளினார். அப்போது, சுற்றிக்கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஆரவாரம் செய்து பக்தி பரவசத்தில் கரகோஷம் எழுப்பினர்.


இதனையடுத்து கள்ளழகர் ஆழ்வார்புரம் மற்றும் வைகை வடகரை ஆகிய பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இதனையடுத்து ராமராயர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மீது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக தோப்பறைகளை பயன்படுத்தி நீரை பீய்ச்சி அடித்தனர்.





அப்போது கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிபாடி ஆரவாரத்துடன் உற்சாகமாக தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து அங்கிருந்து புறப்பாடாகி வண்டியூர் பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழந்தருளினர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தால் மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.