மதுரையில் ஒரு வாரத்திற்குள் இரு கார்கள் தீ விபத்தில் முழுவதுமாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு பற்றியெரிந்த கார்
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜம்புகேஸ்வரன் என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சிவகாசி சென்றுவிட்டு மதுரைக்கு வந்துள்ளனர். இந்நிலையில்  நேற்று நள்ளிரவு  மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி மேம்பாலத்தில் கார் சென்றபோது திடீரென காரின் முன்பகுதியில் புகை வெளியேற தொடங்கியுள்ளது. இதனையடுத்து காரில் இருந்தவர்கள் கீழே இறங்கிய சில நிமிடங்களுக்கு கார் தீப்பற்ற தொடங்கி மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் மேம்பாலத்தில் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து கார் முழுவதும் தீ பரவ தொடங்கியதால் தீ பிளம்பு புகையுடன் வானுயர அளவுக்கு எரிந்தது. மேம்பாலத்தில் சென்ற கார் தீப்பற்றியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
 
விளக்குத்ததூண் காவல்துறையினர் விசாரணை
 
பின்னர் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்புதுறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து இரும்பு கூடு  போல மாறியது. காரில் ஏற்பட்ட தீ்விபத்தின் போது பெட்ரோல், ஏசி போன்றவை எரிந்தபோது வெடிக்க தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேம்பால பகுதி என்பதால் தீயை அணைக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் யாரும் அருகில் கூட செல்ல முடியாத அளவிற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாகனத்தில் ஏற்பட்ட பேட்டரி  தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையின் பழமை வாய்ந்த நூற்றாண்டு ஏவி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக யாரும் காயமின்றி தப்பினர்.
 
கொட்டும் மழையின் நடுவே கார் எரிந்தது
 
மதுரையில் கடந்த வாரத்தில் கொட்டும் மழையின் நடுவே நத்தம் பறக்கும் பாலத்தின் கீழ் சாலையில் சென்ற  கார் ஒன்று தீப்பற்றி முழுவதும் எரிந்த நிலையில் நேற்றிரவும் மீண்டும் கோரிப்பாளைய மேம்பாலத்தில் சாரல் மழை பெய்தபோதே கார் தீப்பற்றி எரிந்தது. மதுரையில் ஒரு வாரத்திற்குள் இரு கார்கள் தீ விபத்தில் முழுவதுமாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.