மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள டைம் கீப்பர் அலுவலகத்தில் அரசு பேருந்து ஓட்டுனரை காலணியால் தாக்கிய சம்பவத்தில் போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட 5 பேர் மீது கரிமேடு காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
காலணியால் தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி  சர்ச்சை
 
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 9ஆம் தேதி அதிகாலையில் பயணிகளை பேருந்தில் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் கணேசன் அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் காலணி தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் மாரிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மாரிமுத்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றையும்  வெளியிட்டிருந்தார். இதனிடையே  மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் போராட்டங்களை நடத்திவந்தனர். 
 
5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை
 
இந்நிலையில் மதுரை மாநகர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 9ஆம் தேதி அதிகாலை திருப்பூர் நோக்கி செல்ல இருந்த அரசு பேருந்து ஒட்டி வந்த தாராபுரம் காளிபாளையம் பகுதி சேர்ந்த அரசு ஓட்டுநரான கணேசன் என்பவரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் உதவி மேலாளராக பணிபுரியும் மாரிமுத்து மற்றும் அவருடன் அடையாளம் தெரிந்த 4 பேர் கணேசனை காலணியால் தாக்கி அவதூறாக பேசியதாக கூறி கணேசன் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ஓட்டுனர் கணேசன் அளித்த புகாரின் கீழ் போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து மற்றும் அவருடன் இருந்த நான்கு பேர் மீதும் அரசு பணியாளரை தாக்குதல், மிரட்டல், அசிங்கமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், கூட்டமாக சேர்த்து தாக்குதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.