எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க அண்ணாமலை உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம் அவரது கட்சிக்காரர்களை தூண்டிவிட்டால் போதும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்தார்.
மதுரையில் ஈ.பி.எஸ்., எழுச்சிப் பயணம் மேற்கொள்கிறார்
செப்டம்பர் 1ம் தேதி முதல் மதுரையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் "மக்களை காப்போம் தமிழகத்தை - மீட்போம் என்ற எழுச்சி " பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்காக மதுரை காளவாசல் பகுதியில் உள்ள மேற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணத்திற்கான பிரச்சார வாகனம் மற்றும் நிழற்குடைகளை துவக்கி வைத்தார்.
செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு
தொடர்ந்து இந்த நிகழ்வில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..,” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 1ஆம் தேதி மதுரை வருகிறார். மாலை 4 மணியிலிருந்து அரசியல் எழுச்சி பயணம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் போது கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் கொண்ட குழு, மேள தாளங்கள் முழங்க வரவேற்க உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் மூன்றாம் தேதி மாலை 5 மணி அளவில் மதுரை மேற்கு தொகுதியில் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
உலகமே காரி துப்புகிறது
மதுரை மாவட்டத்திற்கு 8000 கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தவர் எடப்பாடி. மதுரை மக்கள் எடப்பாடி பழனிசாமியை இன்முகத்தோடு வரவேற்பார்கள். மதுரை மக்களின் குடிநீர் பிரச்சனையை சரிசெய்து இரண்டு தலைமுறை பயன்படும் அளவிற்கு தொலைநோக்கு பார்வையில் தண்ணீர் திட்டம் தந்தவர் எடப்பாடி பழனிசாமி. மதுரையில் வளர்ச்சி உயர்மட்ட பாலங்கள், பறக்கும் பாலங்கள், வைகை ஆற்றில் ஐந்து தடுப்பணை கட்டியது, தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பும் வகையில் சீரமைப்பு செய்தது. மதுரை மாநகராட்சி ஊழல் நிறைந்த மாநகராட்சி, உலகமே காரி துப்புகிறது. மதுரை கோயில் மாநகரம், இன்றைக்கு குப்பை மாநகரமாக மாற்றிய பெருமை மதுரை மாநகராட்சிக்கு சேரும், வரலாறு காணாத வகையில் மதுரை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டல தலைவர்கள் வரி முறை கேட்டால் ராஜினாமா செய்துள்ளனர். திமுகவிற்கு கொஞ்சம் கூட வெட்கம் மானம் ரோஷம் இல்லை. ஊழல் மேயரை வைத்துக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கும். திருடனை வைத்துக் கொண்டே திருட்டை ஒழிப்பது போல இருக்கிறது.
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, 2026 சட்டமன்ற பொது தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை உயிரை கொடுத்தாவது முதலமைச்சர் அரியணையில் ஏற்றுவோம் என பேசியது குறித்து பதில் அளித்த செல்லூர் ராஜூ
அண்ணாமலை உயிரை எல்லாம் கொடுக்க வேண்டாம், அவரது கட்சிக்காரர்களை தூண்டிவிட்டால் போதும். அன்பு சகோதரர் அண்ணாமலை அவரது கட்சிக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தால் போதுமானது. அதிமுக ஆட்சி மலரப்போகிறது” எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.