மதுரை ஆதீனம்
 
மதுரை 292-வது ஆதீனம் மறைவிற்கு பின் பல ஆண்டு பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தில் ஹரி ஹர ஞானசம்பந்தர் தேசிக்காச்சாரியார் கடந்த 2021-ஆம் ஆண்டு 293-வது ஆதீனமாக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றது முதல் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அரசியல் மற்றும் சினிமா தொடர்பாக கருத்துகளை கூறி ஏடாகூடமாக இணையத்தில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியது.
 
மதுரை ஆதீனத்தை கொலை செய்ய என குற்றச்சாட்டு
 
சென்னையில் காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் சொகுசு காரில் மே-2ஆம் தேதி சென்றபோது மற்றொரு கார் மோதி சிறிய விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாக கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதில் குறிப்பாக "குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள்" கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார். அவருடன், அவரது ஓட்டுநரும் அது குறித்து பேட்டி அளித்திருந்தார். இந்த கருத்து இரு மதத்தினர் இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியது.
 
தவறான தகவல் வெளியீடு
 
இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சி.சி.டி.வி., காட்சியை காவல்துறை தரப்பில்  வெளியிடப்பட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக, கூறி அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மதமோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும், பல இடங்களில் மனு அளிக்கப்பட்டது. 
 
சைபர் கிரைம் வழக்கு
 
குறிப்பாக சென்னை எழுப்பூர் அருகே உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் கடந்த 24ஆம் தேதி சென்னை காவல் நிலைய காவல் ஆணையருக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில் மதுரை ஆதீனத்துக்கு நடந்த சாலை விபத்து தொடர்பாக ஒரு மாநாட்டிலும் பல தொலைக்காட்சி நிறுவங்களுக்கும் மற்றும் சமூக ஊடகங்களிலும் அவரை வாகன விபத்து மூலம் கொலை செய்ய சதி வேலை நடந்திருப்பதாக கொலை செய்ய வந்தவர்கள், மத அடையாளத்தில் இருந்தது போன்றும் சொல்லியிருந்தார்.
 இது சிறுபான்மையினர் குறித்து தவறான கருத்துக்களை பரப்பு மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனார் ஞானசம்பர் தேசிக பராசாரியார் மீது வழக்கு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒருவரை தூண்டுதல் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்து உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
 
முன் ஜாமின் வழங்கி உத்தரவு
 
இந்நிலையில் முன்ஜாமின் கோரி, மதுரை ஆதினம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி எஸ்.கார்த்திகேயன், நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.