மதுரை நாடாளுமன்றம்:


Election Results 2024: மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை என வாக்குகள் தனி தனியாக எண்ணப்பட்டது. 25 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே, தி.மு.க., கூட்டணியின் ஆதரவு வேட்பாளர் சி.பி.எம் சு.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

 

முதல் 9 சுற்றுக்களில் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் 2-ம் இடம் பிடித்தார். 10-வது சுற்றில் இருந்து அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் பின்னுக்கு தள்ளப்பட்டு பா.ஜ.க வேட்பாளர் இராம.ஶ்ரீனிவாசன் 2-ம் இடத்தை பிடித்தார்.

 

2-வது முறை வெற்றி பெற்ற சு.வெங்கடேசன்


இறுதிச்சுற்றின் நிலவரப்படி 9,88,216 வாக்குகள் எண்ணப்பட்டன, அதன்படி தி.மு.க கூட்டணியின் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் 4,30,323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2,20,914 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை பா.ஜ.க வேட்பாளர் இராம.ஶ்ரீனிவாசனும், 2,04,804 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனும், 92,879 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவி பிடித்தனர்.

 

மேலும் நோட்டா 11,174 வாக்குகள் பெற்றுள்ளது. பா.ஜ.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை தவிர நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா தேவி உட்பட 18 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். மதுரை மக்களவைத் தொகுதியில் 2-ம் முறையாக வெற்றி பெற்ற சு.வெங்கடேசனுக்கு மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா வெற்றி சான்றிதழை வழங்கினார்.

 

தமிழ்நாடு மிக வலிமையாக உள்ளது


நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் தளபதி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக சு.வெங்கடேசன் அளித்த பேட்டியில் "எனக்கு கிடைத்த வெற்றி என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டணியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு கிடைத்துள்ள வெற்றியாக கருதுகிறேன்.

 

2019 நாடாளுமன்ற தேர்தலை விட 3-ல் 1 பங்கு வாக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. மதுரை மக்களின் அரசியல் உறுதிமிக்க வெளிப்பாடை காட்டுகிறது. தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை இந்தியா கூட்டணி பெற்றுள்ளது. 50% வாக்குகளை பெற்றுள்ளது. அரசியல் வரலாற்றில் மிக முக்கிய செய்தியாக உள்ளது. இந்தியா முழுக்க உள்ள அரசியல் சூழலில் தமிழ்நாடு மிக வலிமையாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு அரசியல் முக்கியத்துவம் இருக்கும். 2024 தேர்தலின் தாக்கம் 2026-ல் இருக்கும். இந்தியாவில் மோடி ஆட்சி தொடரக்கூடாது என்பதற்காக மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். மக்கள் தீர்ப்பின் அரசியல் உள்ளடக்கத்தை இந்தியா கூட்டணியின் தலைவர்கள் நிறைவேற்றுவார்கள்" என கூறினார்.

 

சொன்னதை செய்த அமைச்சர்


 

பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறுகையில் "தமிழகத்தில் மூன்றாண்டு காலமாக திமுக செய்துள்ள சாதனைகளுக்காக மிகப்பெரிய வெற்றியை மக்கள் தந்துள்ளனர். மேலூர், மதுரை கிழக்கில் 1 இலட்சம் வாக்குகள் பெற்று தருவோம் என கூறினேன், அதன்படி 1 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்றுத் தந்துள்ளோம். இந்தியா கூட்டணியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக மக்கள் மக்கள் வாக்கு அளித்து உள்ளார்கள்" என கூறினார்.