லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கினை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜா முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. இந்த படத்தில் கலவரம், சட்ட விரோத செயல்கள்  கார், இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும், போன்ற காட்சிகள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காண்பிக்கிறார். இதுபோன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும், மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். 




 

வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து திரைப்படமாக்கியதற்கு இந்திய தண்டனை சட்டங்களின் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்பட குழு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராக வில்லை எனவே இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.