பழனி முருகன் கோயிலில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஆன்மீக ஸ்தலமாக உள்ளது பழனி முருகன் கோவில், தமிழ்கடவுள் என்றழைக்கப்படும் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அதிக வருவாய் கிடைக்கக்கூடிய கோவிலாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த திருவிழாவை தொடர்ந்து தற்போதும் முருக பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும் வந்து செல்கிறனர்.
அதேபோல பிரபல சினிமா நடிகர்கள், அரசியல் பிரமுகர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. நடிகை சமந்தா, கெளதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன், சந்தானம், என பல்வேறு திரைபிரபலங்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு கூட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்ய பழனி முருகன் கோவில் வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் வருகை தந்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் துணை முதல்வர் சிவக்குமாரை கோயில் அதிகாரிகள் மலை கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலை நேரத்தில் நடைபெறக்கூடிய சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தார். கோயில் அதிகாரிகள் துணை முதல்வர் சிவக்குமாருக்கு பிரசாதங்கள் வழங்கினர்.
தொடர்ந்து மலைக் கோயிலில் நடைபெறக்கூடிய தங்கரத புறப்பாடு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய சிவகுமார், பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக வருகை தந்ததாகவும், தமிழகத்திற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் பழனிக்கு கர்நாடகாவில் இருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பேருந்து சேவையை துவங்க துறை அமைச்சரிடம் கூறுவதாக தெரிவித்தார். துணை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கமால் தவிர்த்து விட்டு சென்றார். கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் வருகையால் பழனி மலைக் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.