காவலர் ஸ்ரீமுருகனை திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றுவது தொடர்பாக 2 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

கர்மாவின்யின் படி மதுரையில் போக்குவரத்து காவலராக ஸ்ரீமுருகன் மாற்றம் செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவல்துறை மற்றும் ஸ்ரீ முருகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மதுரை அவனியாபுரத்தில் ரைட்டராக பணியாற்றியவர் ஸ்ரீமுருகன் நிர்வாகக் காரணங்களுக்காக தூத்துக்குடிக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, பிராராப்த கர்மாப்படி, மனுதாரரை மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

 

இதை எதிர்த்து காவல்துறை மற்றும் ஸ்ரீமுருகன் தரப்பிலும் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அரசுத் தரப்பில்,  மனுதாரரை திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில்,  திண்டுக்கல் மாவட்டத்தில் இடமாற்றம் செய்வதை ஏற்பதாக கூறப்பட்டது. 

 

இதையடுத்து நீதிபதிகள், கர்மாவின்படி மதுரையில் போக்குவரத்து காவலராக மாற்றம் செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து,  காவலர் ஸ்ரீமுருகனை திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றுவது தொடர்பாக 2 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.