தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.


அதில் “தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.


இதற்கான வேஷ்டி, சேலைகளை தமிழ்நாடு நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பாராட்டத் தகுந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாயப் பொருள்கள் அருகாமை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன.


சில சமயங்களில், அந்தக் கடைகள் தரமான பொருள்களை வழங்குவது கிடையாது.  இதற்கு மாற்றாக அவற்றை தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்தே வாங்கினால் விவசாயிகளும் பலனடைவர். இது தொடர்பாக நடவடிக்கை  எடுக்கக்கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படக் கூடிய பொருள்களை தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்தக் கோரிக்கை நியாயமானது, நன்மை அளிப்பது. இது தொடர்பாக அரசு ஏதேனும் முடிவெடுத்துள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினர்.


அதற்கு அரசு தரப்பில் இது தொடர்பாக தகவல் பெற்று தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.