கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்தும் சிபிஐ விசாரணை தேவை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.


திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பாக கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மலைக்கோட்டையின் மீது அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் விக்ரகங்கள் இருந்தன. திப்பு சுல்தான் படையெடுப்பு காலத்தில் சிலைகள் அகற்றப்பட்டு, கீழே உள்ள அபிராமி அம்மன் கோயிலில் உள்ளது. மீண்டும் மலைமீது அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் சிலையை நிறுவ வேண்டுமென திண்டுக்கல் மக்கள் மற்றும் அபிராமி அம்மன் பக்தர்கள் கோரிக்கையாக வைக்கின்றனர். இதற்கு இந்து முன்னணி ஆதரவு அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து சிலைகள் மலைமீது வைக்கப்பட வேண்டும். சின்னாளப்பட்டி பெருமாள் கோயில் பட்டி பகுதியில் அதிகமாக இருக்கக்கூடிய கிறிஸ்தவர்கள் இந்து கோவில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.




இந்த பிரச்சனையை முதலில் ஆரம்பித்தது காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகைதான். பாஜகவில் ரவுடிகள் அதிகமாக இருப்பதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். தேசிய கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அவ்வாறு பேசியிருக்கக்கூடாது. என்பது எனது கருத்து தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்த கேள்விக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பாமக கட்சியை சேர்ந்தவர்கள் வெட்டப்பட்டுள்ளனர். தற்போது ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று தினமும் ஒன்று முதல் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இது சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.




ஒருவர் மீது 7க்கு மேற்பட்ட வழக்குகள் இருந்தால் அவர்களை உளவுத்துறை கண்காணிக்க வேண்டும். தமிழக உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. உளவுத்துறைக்கு தமிழக அரசு முழு சுதந்திரம் அளிக்கவில்லை. சரியான அதிகாரிகளை நியமனம் செய்து முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். அப்போதுதான் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். ஆளுங்கட்சி ரவுடிகளுக்கு பின்புலமாக உள்ளது. அதனால், காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று இந்து முன்னணி கருதுகிறது. சட்டவிரோத மதுபானம் மற்றும் மணல் கொள்ளைகள் குறித்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டால் அது குற்றவாளிகளுக்கு எளிதாக தெரிந்து விடுகிறது.




இதனை தமிழக அரசு முறையாக கவனிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தேவை. அதேபோல் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்தும் சிபிஐ விசாரணை தேவை அவரது கொலையில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்று தகவல் வெளிவருகிறது. இதனை ஆளுங்கட்சி மாற்றிக் கொள்ளவில்லை என்றால் வரும் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வேண்டிய வரும். பழனியில் நீதிமன்றத்தில் உத்தரவை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தியுள்ளனர் . இது குறித்து இந்து முன்னணி அறிக்கை கொடுத்துள்ளது. அங்கு சிறு கடைகள் வைத்திருப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் இல்லையென்றால் இளைஞர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.