மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள தோப்பு ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக  மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்னந்தோப்பில் பெண் சடலம்



 

மதுரை மாவட்டம் ராமேஸ்வரம்  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விரகனூர் பகுதியில் சாலையோரம் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் உள்ள வீட்டின் முன்பாக 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் சடலமாக கிடப்பதாக சிலைமான் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிலைமான் காவல்துறையினர் முகத்தில் காயங்களுடன் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அருகில் உள்ளவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் அடையாளம் தெரியவில்லை என கூறியுள்ளனர். இதனையடுத்து பெண்ணின் உடலைமீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

 


 

பெண்ணின் அடையாளம் கண்டறிவதில் சிரமம்

 

இந்நிலையில் உயிரிழந்த நிலையில் காயங்களுடன்  மீட்கப்பட்ட பெண் சடலம் யார் எங்கிருந்து இங்கி வந்தார் என்பது குறித்தும், வேறு ஏதேனும் பகுதியில் கொலை செய்துவிட்டு தோப்பிற்குள் தூக்கி எறிந்து சென்றுவிட்டனரா? சாலையில் சென்றவர் மோதிய விபத்தை மறைப்பதற்காக உடலை வீசி சென்றனரா ? என்ற பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே  உயிரிழந்த பெண்ணின் அடையாளம் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில்  உயிரிழந்த நிலையில் கிடந்த பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள சிலைமான் காவல்துறையினர் பெண்ணின்  அடையாளம் மற்றும் விவரங்கள் குறித்து தகவல் அளிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் மதுரை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் காணாமல் போன நபர்களின் அடையாளங்களுடன் ஒப்பிட்டும் விசாரணையை நடத்திவருகின்றனர். மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள தோப்பு ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக  மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.