மதுரை நாடாளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையில் கடந்த 7ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக கூறி, கடந்த 12ஆம் தேதியன்று  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், மதுரை மாநகர காவல் துறை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  அந்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர சைபர்கிரைம் காவல்துறையினர் சென்னையில் வைத்து பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை நேற்றிரவு கைது செய்தனர்.





இதனையடுத்து இன்று காலையில் எஸ்.ஜி.சூர்யாவை ரேஸ்கோர்ஸ் காலனி நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.  இதனையடுத்து 3 மணி நேரமாக இரு தரப்பினரும் வாதங்களை எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து வாதங்களை கேட்டறிந்த நீதிபதி எஸ்.ஜி.சூர்யாவை ஜூலை 1 ஆம் தேதி வரை 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைத்தனர். நீதிமன்ற காவல் அளிக்கப்பட்ட நிலையில் நீதிபதி வீட்டின் முன்பாக பாஜகவினர் சிறிதுநேரம் காவல்துறையினர் வாகனத்தை மறைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, காவல்துறையினர் மற்றும் திமுக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கலைய செய்தனர். முன்னதாக நீதிபதி வீட்டின் முன்பாக எஸ்.ஜி.சூர்யாவை ஆஜர் படுத்தபட்டபோது ஏராளமான பாஜகவினர் கூடியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவி ஆணையர் சூரக்குமரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தனர்.




சிறைக்கு அழைத்து சென்றபோது வாகனத்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா : ஸ்டாலினுக்கு உரிய பாடம் புகட்டப்படும் என்றார். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்த விவகாரம் திமுக பாஜக இடையே வார்த்தை மோதலை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பரும் பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டது சிறையில் அடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.