தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக நடைபெறும்.  குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது

 

 


 


ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. 

 



 

இதில், தை முதல்நாளில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் கிராம கமிட்டியினர் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால் கடந்த 4 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது ஓய்வுபெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் அரசே நடத்திவந்தது. இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி -15ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியினை அவனியாபுரம் தென்கால் பாசன கால்வாய் விவசாயிகள் சங்கத்தினரே நடத்த அனுமதி அளிக்க கோரி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர்  இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



அரசின் வழிகாட்டுதலோடு அனைத்து முன்னேற்பாடுகளை செய்து அமைதியான முறையில் நடத்திட விவசாய சங்கத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு சாதி சாயம் பூச வேண்டாம் எனவும், வருவாய் கோட்டாச்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தி சாதி சங்கங்களை சிலர் ஒருங்கிணைப்பதாகவும், அவனியாபுரம் அமைதி பேச்சுவார்த்தை குழுவில் காளை வளர்ப்போரையும் இணைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் சாதி சங்கங்களுக்கோ, தனி அமைப்பினருக்கோ ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதியை அளிக்க கூடாது எனவும் கூறினர். இது தொடர்பான மனுவினை மாவட்ட வருவாய் அலுவலர்,  கோட்டாச்சியர், வட்டாச்சியர் உள்ளிட்டோரிடமும் வழங்கினர். 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

Continues below advertisement