இலங்கையில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் கப்பலில் இருந்த ரசாயனங்கள் கடலில் மூழ்கியது. கடலில் கலந்த ரசாயன கழிவுகளால்  இந்திய கடற்பகுதிகளில்; பாதிப்புகள் உள்ளதா என மீனவர்கள்  பிடித்து வரும் மீன்களை மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 



இந்தியாவிலிருந்து 1,486 சரக்கு பெட்டகங்களில் நைட்ரிக் அமிலம் உள்பட பல்வேறு வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.எக்ஸ்பிரஸ் என்ற சரக்கு கப்பலானது கொழும்பு துறைமுகத்தை நெருங்கிய போது கடந்த மே மாதம் 23ஆம் தேதி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. இந்தக் கப்பலில் இருந்த நைட்ரிக் அமிலம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கடலில் கலந்ததால் இலங்கை கடற்கரையில் கடந்த சில நாட்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள், டால்பின்கள் உள்ளிட்ட கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.


இதனால், இலங்கையைச் சேர்ந்த கடல் ஆராய்ச்சி வல்லுனர்கள் இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கடல் மாசு, இந்திய கடற்பரப்பிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனால் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஸ்கோடி பகுதிகளை சேர்ந்த  மீனவர்கள் பிடித்து வரும் கணவாய், இறால், மீன்கள்  உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நடத்திய ஆய்வில் ரசாயன கழிவுகள் ஏதும் தென்படவில்லை எனவே அசைவ பிரியர்கள் அச்சமின்றி மீன்களை சாப்பிடலாம் என விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.



இது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ரம்யா ஏபிபி செய்தி நிறுவனத்திடம்   பேசுகையில், 


கொழும்பில் சிங்கப்பூர் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் சரக்கு பெட்டகங்களில் இருந்து வெளியான வேதி பொருட்களால்  இந்திய கடற்பரப்பில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.


மீனவர்கள் பிடித்து வரும் அனைத்து மீன்களில் இருந்து இரண்டு மீன்கள் மாதிரிகளுக்காக மண்டபம் மரைக்காயர்பட்டினம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய ஆய்வகத்திற்கு எடுத்து வரப்படுகிறது. ஆய்வகத்திற்கு எடுத்து வரும் மீன்களின் நீளம் மற்றும் அகலம் முதலில்  அளவிடப்படும். பின்னர் அந்த மீனின் செதில் பகுதிகளில் பிளாஸ்டிக் துகள்கள் அல்லது எண்ணெய் படிந்துள்ளதா என விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்படுகிறது.



அதை தொடர்ந்து மீன்களின் உடலில் காயங்கள் அல்லது உடல் அமைப்பில் மாற்றம்  ஏதும் உள்ளதா என ஆய்வு செய்த பின்  மீன்களை அறுத்து அதன் வயிற்றுப் பகுதியில் மீன்கள், சாப்பிட்ட உணவையும், உணவின் அளவு மற்றும் உணவுப் பொருட்களில் வேதிப்பொருட்கள் அல்லது பிளாஸ்டிக் துகள்கள் ஏதும் உள்ளதா என்பதனை நுண்ணோக்கி (மைக்ரோஸ்கோப்) பயன்படுத்தி  சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றார். 


இதுவரை நடத்திய ஆய்வில் ரசாயன கழிவுகள் ஏதும் தென்படவில்லை எனவே அசைவ பிரியர்கள் அச்சமின்றி மீன்களை சாப்பிடலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.