தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறது. 

 

இந்நிலையில் மதுரையிலும் ஆவின் பால் தட்டுப்பாடு எதிரொலியாக, மதுரை ஆவின் பால் டெப்போக்களில் பால் அட்டை வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்  என சொல்லப்பட்டது வாடிக்கையாளர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஆவின் நிர்வாகம்  ”ஆதார் அட்டை கட்டாயம் இல்லை ஏதேனும் ஒரு அடையாள அட்டை பெற்றுவிட்டு அதற்கு பின்பாக பால் அட்டை பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.


 

 

மதுரை  அண்ணா பேருந்துநிலையத்தில் இருந்து பாண்டிக்கோயில் செல்லும் சாலையில் உள்ளது  ஆவின் மத்திய பால்பண்ணை. இங்கிருந்து  ஒன்றியங்களில் உள்ள பால் விவசாயிகளிடமிருந்து இருந்து வர வேண்டிய பால் குறைவாக வருவதால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது.



 இந்த நிலையில் அனைத்து பால் டெப்போக்களிலும் பால் அட்டை மூலமாக ஆவின் பால் வாங்கக்கூடிய வாடிக்கையாளர்கள் ஆவின் பால் அட்டை பெறுவதற்காக ஆதார் அட்டை,  குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொடுத்த பின்பு ஆவின் பால் அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு அந்த சுற்றறிக்கைகள் அனைத்து டெப்போக்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. ஆவின் பால் அட்டை வாங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏராளமான குழப்பத்தில் ஆழ்ந்தனர்.




 

 இது குறித்து ஆவின் நிர்வாகத்திடம் கேட்டபோது ஆதார் அட்டை கட்டாயம் இல்லை ஏதேனும் ஒரு அடையாள அட்டை பெற்றுவிட்டு அதற்கு பின்பாக பால் அட்டை பெற்றுக்கொள்ளலாம் எனவும், பால் அட்டை வாடிக்கையாளர்கள் அதிகளவிற்கான பால்பாக்கெட்டுகளை மொத்த மொத்தமாக ஒரே அட்டைக்கு வாங்கி செல்வதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் இந்த நடைமுறை சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அமல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.