பாதிக்கப்பட்ட மனுதாரரின் கோரிக்கை  குறித்து ஏன் இதுவரை பரிசீலிக்கவில்லை? என கேள்வி எழுப்பியதுடன் தமிழ்நாடு காவல்துறை தலைவர் DGP  மற்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் SP நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துமாரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, எனது, மூத்த மகன் டேவிட் டிரைவர்  மற்றும் இளைய மகன் கார்த்திக் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி கேணிக்கரை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் காவல்துறை வாகனத்தில் வீட்டிற்கு வந்து எனது மகன்களை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றார். 



 

அடித்து உதைத்து மிரட்டிய காவல்துறை:


இதனைத்தொடர்ந்து காவல்நிலையத்திற்கு சென்ற போது எனது மகன் உள்பட 4 பேர் மீது அனுமதி இன்றி பட்டாசு வெடித்ததாக கூறினர். இந்நிலையில் காவல்நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் ஜோதிமுருகன் மற்றும் காவலர்கள் எனது மகன்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயம் அடைந்த எனது மகனை உயிரை காப்பாற்றுவதற்காக சைல்ட் லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். 

 

உடனடியாக சைல்ட் லைன் அமைப்பினர் காவல்நிலையத்திற்கு வந்து தனது மகன்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை தடுத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கில்  புகாரளித்த தமிழ்ச்செல்வி என்பவர் வழக்கை திரும்ப பெற்றதாக கூறி எனது மகன்கள் விடுவிக்கப்பட்டனர்.  தொடர்ந்து சிகிச்சைக்காக எனது மகன்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறவிடாமல் காவல்துறையினர் தடுத்தனர். மேலும் உதவி ஆய்வாளர் ஜோதிமுருகன் மற்றும் காவல்துறையினர் மீது எங்கும் புகார் கொடுக்கக்கூடாது என எங்களை அச்சுறுத்தியதோடு எங்கள் பொய் வழக்கு போடுவோம் என மிரட்டினர். 




 

நீதிமன்றத்தில் மனு:


 

எனவே, பொய்யான குற்றச்சாட்டில் எனது மகன்களை சட்டவிரோதமாக சிறையில் வைத்து கொடூரமாக கொலை வெறி தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் ஜோதிமுருகன் மற்றும் உடனிருந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி கேகே ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு உதவி ஆய்வாளர் ஜோதி முருகன்  மனுதாரரின் இரண்டு மகன்களையும் கொடூரமாக காவல் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த  காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்த இரண்டு வருடம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிய வழக்கறிஞர் தாக்குதலில் காயம் அடைந்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

 

நீதிபதி சரமாரி  கேள்வி:


இதனைத் தொடர்ந்து நீதிபதி காவல் நிலையத்தில் வைத்து மாணவன் உள்பட இருவரை கொலை வெறி தாக்குதல் நடத்திய துணை காவல் ஆய்வாளர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவல் திருப்தி அளிக்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு காவல்துறை தலைவர் DGP மற்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் IG ஆகியோர்  மனுதாரரின் கோரிக்கை குறித்து ஏன் பரிசீலிக்கவில்லை என்பதற்கான விளக்கமளிக்கும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் நீதிபதி.

 

இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில்ராஜர் ஆகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 18 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.