மதுரையில் தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் இளைஞர் மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய புகாரில், மாணவிகளின் போராட்டம் எதிரொலியாக 31 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள யாதவா மகளிர் கல்லூரியில், மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கல்லூரியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் தங்குவதற்கான விடுதி செயல்பட்டுவருகிறது.

 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதியில் பெண்கள் உடை அணிந்த மர்ம நபர்கள் சிலர் நடமாடுவதாகவும், அவர்கள் மாணவிகளுக்கு பல்வேறு தொல்லை தருவதாகவும் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். 



 

ஆனாலும் கல்லூரி நிர்வாகம் மகளிர் விடுதியில் ஆட்கள் நடமாட்டம் குறித்த மாணவிகளின் புகார் குறித்து கண்டுகொள்ளாத நிலையில் இந்த விடுதி சம்பவம் குறித்து மாணவிகள் ஏராளமானோர் தங்களது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவந்தனர். இதனிடையே யாதவா மகளிர் கல்லூரி விடுதிக்குள் நுழைந்து  மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த   இளைஞர்களை கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டியும்  கல்லூரியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று மதியம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

 

அப்போது மாணவிகள் கல்லூரி நுழைவாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தபோது அங்கிருந்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளை கல்லூரிக்குள் செல்லுமாறு விரட்டினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் திருப்பாலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் மதுரை கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்த அழகர் என்பவரை காவல்துறையினர் அழைத்துச்சென்று விசாரணை 2 நாட்களாக நடத்திவருகின்றனர்.



 

இந்நிலையில் தொடர்ச்சியாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையிலும் மாணவிகள் கல்லூரிக்கு வருகையும் இன்று குறைந்தது. இந்நிலையில் விடுதி மாணவிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் ரகசிய உத்தரவைப் பிறப்பித்தது.

 

இதையடுத்து விடுதி மாணவிகளை பெற்றோர்கள் அவர்களது வீடுகளுக்கு அழைத்துச்சென்றனர். இது குறித்து பெற்றோர்களிடம் கேட்டபோது மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் 31ஆம் தேதி வரை விடுமுறை என கூறியதாகவும், இதனையடுத்து மாணவிகள் கூறியதன் பெயரிலும் பெற்றோர்கள் மாணவிகளை அழைத்துச்சென்றனர். மதுரையிலுள்ள யாதவா மகளிர் கல்லூரி விடுதியில் இளைஞர் நுழைந்து தொந்தரவு அளித்த விவகாரத்தில் மாணவிகள் தொடர்ந்து போராட்டங்கள் குறித்து சமூகவலைதளங்களில் அறிவிப்பை வெளியிட்டுவருவதன் எதிரொலியாக கல்லூரி விடுதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.