மதுரை முனிச்சாலை சிக்னல்ல இருந்து கிழக்கு பக்கம் நகர்ந்த... கொஞ்ச தூரத்துலையே 'மடைக்கருப்பசாமி' பருத்திப்பால் கடை  பளிச்சுன்னு தெரியும். அப்பா சந்தானமும் மகன் கோவிந்தராஜும் பருத்திப்பால் ஊத்திக் கொடுத்து கஷ்டமர்கள மாத்தி, மாத்தி கவனுச்சுக்கிட்டு இருந்தாங்க. ஊதுபத்தி வாடை ஒரு பக்கம் இழுத்தாலும், அதையும் தூக்கி சாப்டுற மாதிரி பருத்திப்பால் வாசம், சந்தன வாசம் மாதிரி விசும்பி அடிச்சுச்சு. சோளத்துல இருக்க கருது மாதிரி கடையப்பக்கம் லேசா எட்டி பார்த்தோம்.





நெத்தி நிறைய விபூதி, சந்தனம், குங்குமம் என திலகமிட்டிருந்த சந்தானம் ஐயா வாய் நிறைய 'வாங்கப்பானு' சிரிச்ச முகத்தோட கூப்பிட்டாரு. ஆவி பறக்குற பருத்திப்பால கைப்பிடி செம்புல கலந்து, அவர் வைத்திருந்த இயற்கை நறுமண பொடிகள கலந்து கண்ணாடி கிளாசுல குடுத்தாரு. உச்சி மண்ட வேர்க்குற அளவுக்கு பருத்திப்பால் சூடாவும், சுறுக்குனும் இருந்துச்சு. குடிச்சு முடிச்ச கையோட தொடச்சு முடிச்ச பேப்பர கீழ போட்டுட்டு சந்தானம் ஐயாட்ட பேச்சுக் கொடுத்தோம்....," பருத்திப்பால் என்றவுடன் வெல்லம் , சீனி, எசென்ஸ் , கலந்து செய்யும் இந்த காலத்து பருத்திப்பாலுனு நெனைக்காதீக. கமகமக்கு, தித்திப்பாய் சுவைக்கும், திக்கான அடர் மஞ்சள் நிறம் நிறைந்த கருப்பட்டி பருத்திப்பால் தான் என்னோட பொருளு. இதுல சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை, கருப்பட்டி , திப்பிலி , தேங்காய் என்னோட அன்பு எல்லாத்தையும் கலந்து உணவே மருந்து என்ற பாணியில் குடுக்குகிறேன். எங்க குலசாமி பேரதான் எங்க கடைக்கு வச்சுருக்கோம்.





'திருமலை மடக்கருப்பு' துடியான தெய்வோம். இன்னைக்கும் எங்கள கைவிடாம தலமாடு காத்துவருது. தெய்வத்துக்கு பயந்து தான் வேலை செய்றேன். பருத்திப்பால் வியாபரத்தை ஒரு சேவை மனப்பான்மையில் தான் செய்துவருகிறேன். பருத்திப்பாலை நல்லா ஊரவச்சு, ஆட்டி அதுல கிடைக்கிற பாலை பசும்பால் மாதிரி நல்லா காய்ச்சி ஆட்டிய பச்சரிசியையும் கலந்து கருப்பட்டியை காச்சி ஊத்திவிடுவேன்.  மிதமா சூட்டுல தொடர்சியாக வைத்துக்கொள்வேன். வாடிக்கையாளர்கள் பருகும் போது ஏலக்காய் , திப்பிலி உள்ளிட்ட சத்துள்ள பொருட்களை கலந்து சுடச்சுட சூடான பருத்திப்பாலா அவர்கள் கையில் கொடுத்துவிடுவேன் . பருத்திப்பால் விலை கிளாஸ் 15 ரூவா. நான் பருத்திப்பாலில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளும் முதல் தர பொருளு,  ஆனாலும் குறைவான விலைக்கே பருத்திபால் வழங்குகிறேன் . மதுரையில் எங்கு சென்று சாப்பிட்டாலும் என் கடை பருத்திப்பால் போல வராது.




கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் நடிகர் கரனும் , நடிகையும் பருத்திப்பால் சாப்பிடுவது போல ஒரு சீனும் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது நம்ம கடை தான் . நானும் பல படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்துள்ளேன். எனக்கு சினிமாவும் ரெம்ப பிடிக்கும். நம்ம கடையில் பருத்திப்பால் மட்டும் அல்ல கூழும் கிடைக்கும் . இயற்கையாக ஆட்டி எடுக்கப்பட்ட பருத்தியையும் , பனங்கருப்பட்டி மூலம் செய்யப்பட்ட பாலும் இணைந்து கொடுக்கும் சுவை  எந்த மாடல் பருத்திப்பாலுலையும் கிடைக்காது. கண்டிப்பா மதுரை வந்தா நம்ம கடைக்கு பருத்திப்பால் சுவைக்க வாங்க.


 





முன்னாடியெல்லாம் இந்த ஏரியாவில் சில தியேட்டர்கள் இருக்கும் வியாபாரம் பிச்சுக்கும். வாடிக்கையாளர்களுக்கு பருத்திப்பால் கொடுக்க முடியாது. அவ்வளவு சிரமம் ஏற்படும். செம பிசியா இருக்கும். அதலாம் மாறிப்போய் சோர்ந்து போச்சு . தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு நம்ம பருத்திப்பால் கடைக்கு மீண்டும் மவுசு இருக்கு. ஆனா பாழா போனா கொரோனா தான் எல்லாரையும் முடக்கிருச்சு. இப்ப கொஞ்சம், கொஞ்சமா மீண்டு பழைய வியாபரத்த பிடிச்சுட்டோம். எங்க அப்பா காலத்துல இருந்து பருத்திப்பால் கடை வச்சுருக்கோம். இப்ப என் மகன் எனக்கு துணையா கடையில இருப்பான்.




என் மனைவி, மருமக எல்லாரும் சேர்ந்து உழைக்கிறது தான் இந்த பருத்திப்பால். அதனால வீட்டு சுவையோட நம்ம பருத்திப்பால் இருக்கும். ஒரு நாளைக்கு 200 டூ முந்நூறு பருத்திப்பால்  தான் கொடுக்க முடியும். அதுக்கு மேல லட்ச ரூபா கொடுத்தாலும் பருத்திப்பால் உற்பத்தி செய்ய முடியாது. அதிகளவு செஞ்சா டேஸ்ட் கொண்டாற முடியாதுனு பெரிய ஆர்டர்லாம் எடுக்க மாட்டோம். ஏதோ சின்ன, சின்ன பங்கசனுக்கு கேட்டா செஞ்சு கொடுப்போம். நம்பிக்கை, நாணயமா தொழில் செய்வது தான் முக்கியம். அதனால தான் எங்கள இந்த அழகா மலையான் நல்லபடியா வச்சுருக்கான்" என்றார் மகிழ்வாக.


 


 


மதுரையின் சிறப்பு உணவுகள் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும் -ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!