1. ”வலி நிவாரண மருந்துகள் போதைக்காக பயன்படுத்துவதால் இந்த மருந்துகள் எளிதாக கிடைப்பதை தவிர்த்து, அவை வழங்கப்படுவதை முறைப்படுத்த வழிகாட்டல்களை பிறப்பிக்க வேண்டும்”- என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

 

2. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட  10.5% உள்இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய  வழக்குகள் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

3. தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறில் தொழிலதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கில், 4 பேர் உட்பட கொலை முயற்சி மற்றும் போக்சோ வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 7 பேர் நேற்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது  செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இது வரை மொத்தம் 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 

4. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏழு இடங்களில் ரூ.1979 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக சட்டசபை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தெரிவித்தார். மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயல்பாடுகள், ஆண்டறிக்கை தொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

 

5. சிவகங்கை மாவட்டத்தில் 3 முறை ஒத்திவைக்கப்பட்டு, நீண்ட இழுபறிக்குப் பின் நடந்த திருப்புவனம் ஒன்றியத் தலைவர். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றது.

 

6. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆவின் தலைவர் வீட்டில் ரூ.4 லட்சம் ரொக்கம், 50 கிராம் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

7. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் தயார் செய்யப்படும் ஆயத்த ஆடைகள், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஆண்டு முழுவதும் இத்தொழில் நடைபெற்று வந்தாலும், தீபாவளி, ஓணம்  பண்டிகைகளை மட்டுமே உற்பத்தியாளர்கள் பிரதானமாக எதிர்பார்க்கின்றனர். நத்தம், சிறுகுடி, கோட்டையூர், புதுப்பட்டி, பரளி, வத்திப்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் இத்தொழில் அமைந்துள்ளது. இங்கு, 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் சட்டைகள்  தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பிறகு சூடுபிடித்த ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் சூடுபிடித்து  தீபாவளி ஆர்டர்கள் குவிகின்றன.

 

8. தீபாவளி நெருங்கும் நிலையில் மதுரை ஆவின் பாலகத்தில், பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

9. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 26 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75041-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 24 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73647-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1169 இருக்கிறது. இந்நிலையில் 225 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.