பிரபலங்களின் அன்பை அறுவடைக்கு பயன்படுத்திய இதயம் அறக்கட்டளை!

இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிக மற்றும் காவல்துறையினர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

Continues below advertisement
இரக்கமே  இல்லாத 'இதயம் டிரஸ்ட்' மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் குன்றிய இளம் பெண்ணின், ஆண் குழந்தையை ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, குழந்தை கொரோனாவால் இறந்ததாக கூறி சினிமா லெவலுக்கு நாடகமாடியது அம்பலமானது. இது தொடர்பான விசாரணையில்  கர்நாடகாவை சேர்ந்த  மற்றொரு குழந்தையும் மீட்கப்பட்டது. மேலூரை சேர்ந்த ஐஸ்வர்யாவின் குழந்தை கொரோனாவால் இறந்தாக போலியான ஆவணங்கள் தயார் செய்ய உதவிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுதும் இருக்கும் காப்பகங்களில் ஆய்வு நடத்தக்கூறி சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தவிட்டுள்ளார். ஒருபக்கம் தலைமறைவாக இருக்கும் இதயம் அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமாரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் சிவக்குமாரும் அவரது கூட்டாளிகளும் பிரபலங்களின் பெயரை சொல்லி பல இடங்களில் சலுகைகள் பெற்று பல்வேறு குற்றங்களைச் செய்ததும் தெரியவந்துள்ளது.


Continues below advertisement

 

 இது குறித்து சமூக ஆர்வலர் அசாருதீன்...," குழந்தை கொரோனாவால் இறந்துவிட்டது என்று சொன்னவுடன் அதிர்ந்துவிட்டேன். அதன் பின்னர் எனக்கு கிடைத்த ஆவணங்களை பார்க்கும் போது லேசான சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் இருக்காது என்ற எண்ணத்தில் தான் குழந்தை காணவில்லை என புகார் அளித்தேன். ஆனால் காவல்துறை விசாரணையில் தான், உண்மைகள் வெளிவர ஆரம்பித்தது. தற்போது கண்டுபிடிக்கப் பட்டதால் குற்றம் வெளியே தெரிந்தது. விழிப்புணர்வு இல்லாத எவ்வளவு பொது ஜனங்களை  ஏமாற்றியுள்ளனர், என்பது தெரியவில்லை. சமுதாயத்திற்கு நல்லது செய்கிறேன் என்ற போர்வையில் குழந்தைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். இதயம் அறக்கட்டளை காப்பகத்தின் மூலம் முதியவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 25 நபர்கள் காப்பகத்திலேயே இறந்துள்ளனர்.  திட்டமிட்டு கொலைகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. குழந்தை விசயத்திலேயே இவ்வளவு தில்லு, முல்லு செய்த சிவக்குமார் முதியவர்களையும் இறந்தாக கணக்கு காட்டி ஆர்கான்ஸ் திருடி இருக்கலாம். இதயம் அறக்கட்டளை மீது இது போன்று பல்வேறு சந்தேகம் இருக்கிறது. மேலும் அறக்கட்டளையை சேர்ந்த நபர்கள் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கையால் விருது பெற்றுள்ளனர். மேலும் காவல்துறையினர்  உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடனும் நெருக்கமாக பழகி, அதைச் வெளியில் சொல்லி தனக்கு சாதகமாக பல்வேறு விசயங்களை  நிகழ்த்தியுள்ளனர். எனவே சந்தேகத்தின் அடிப்படையில் இதயம் அறக்கட்டளை மீதும் நிர்வாகிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்  என காவல்துறை டி.சி.யிடம் புகார் அளிக்க உள்ளேன்" என்றார்.


தற்போதைய காலகட்டத்தில் விளம்பரம் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதனை சிலர் தவறாக பயன்படுத்திக் கொண்டு லட்சங்களையும், கோடிகளையும் குவிக்கின்றனர். சில அமைப்புகள் உயர் அதிகாரிகள் மற்றும் பிரபலங்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் மூலம் விருதுகள் வழங்குகின்றனர். அதன் மூலம் விருதை பெற்ற விஷமிகள், குறிப்பிட்ட அந்த பிரபலம் எனக்கு நெருக்கம் என சொல்லியே மிரட்டி சம்பாதிக்கிறார்கள். ஒரு போட்டோ தானே, என்று எதையும் எளிமையாக எடுத்துக் கொண்டு. திடீர் விருது வழங்கி புகைப்படம் எடுத்துக் கொள்வது. விருது கொடுக்கும் நபர்களின் பெயரையும் சேர்த்துக் கெடுக்கும், என்பதை நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்.


 

இதயம் அறக்கட்டளையில் ஏற்பட்ட குற்றங்கள் தொடர்பாக நான்கு பெண்கள் உட்பட 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சிவக்குமார் மற்றும் அவரத நண்பனை நெருங்கிவிட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றர். அதே போல் இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

 

 

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - இந்தியா முழுக்க '501' கோயில்கள் : யாத்திரை அனுபவம் சொல்லும் சகோதரர்கள்.. !

Continues below advertisement
Sponsored Links by Taboola