தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் அதன்பிறகு 3 நாட்கள் மழையின்றி பனிப்பொழிவு மட்டுமே இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடி, கூடலூர், உத்தமபாளையம் என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இரவு 10 மணி அளவில் தொடங்கிய இந்த மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள கொட்டக்குடி, முல்லைப்பெரியாறு, வைகை உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  போடி, உப்பார்பட்டி, கூழையனூர், வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 46 எக்டேர் பரப்பளவிலான நிலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர், சிறுதானிய பயிர்கள் நீரில் மூழ்கின.  இதேபோல் ஏராளமான வாழை தோட்டங்களிலும் குளம்போல் மழைநீர் தேங்கியது.



 

இந்த கனமழையால் தேனி , போடி, உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி ,என மாவட்டத்தில் ஒரேநாளில் மொத்தம் 85 வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அரசுதரப்பில் நேரில் சென்று பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கெடுக்கபப்ட்டு நிவாரண உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்திருந்ததால்  காலை பள்ளிக்கு வந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 



 

உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோகிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக உத்தமபாளையம் பழைய கோட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கிளை சிறைச்சாலை வளாகத்திற்குள் நேற்று முன்தினம் இரவு மழைநீர் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த விசாரணை கைதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 



 

மழை பொழிவு அதிகரிப்பை தொடர்ந்து தேனி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இருகரைகளையும் தொட்டபடி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக அணைக்கு அருகில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை ஆறு செல்லும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு தொடர்ந்து மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

வைகை அணை இன்றையை நிலவரம் 

நீர்மட்டம்  - 70.11 (71 அடி),  நீர் இருப்பு – 5,855 மில்லியன் கன அடி,  நீர் வரத்து – 8819 கனஅடி,  நீர் திறப்பு – 4403கனஅடியாக உள்ளது.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்