2007 ஆம் ஆண்டு மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சார்பு ஆய்வாளர் சகீலா, ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நாராயணசாமியின் வீட்டின் முன்பு கொட்டப்பட்டிருந்த மணலை அப்புறப்படுத்த கோரியும் கேட்காததால் நாராயணசாமியையும் அவரது மகனையும் அரை நிர்வாணமாக்கி காவல்நிலையத்தில் வைத்து துன்புறுத்தியதற்காக காவல்துறை சார்பு ஆய்வாளர் சகீலாவுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்தும் அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு வழங்கவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை சார்பு ஆய்வாளர் சகீலா தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது, இருந்தாலும் காவல்துறையினர் செய்தது ஏற்புடையதல்ல. ஆகவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என காவல்துறை சார்பு ஆய்வாளர் சகீலாவின் கோரிக்கையை மறுத்ததுடன் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 



மதுரை, கூடல் நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், மதுரை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," நான் கடந்த 11.1.2007ல் எனது காம்பளக்ஸ் முன் நின்றிருந்தேன். அங்கு வந்த அப்போதைய கூடல்புதூர் எஸ்.ஐ.சகீலா (தற்போது சென்னையில் இன்ஸ்பெக்டராக உள்ளார்) மற்றும் போலீசார் வீட்டின் முன்பு கொட்டப்பட்டிருந்த மணலை அப்புறப்படுத்த வேண்டுமென கூறினர். இதை வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவிப்பதற்காக நான் சென்றேன். அப்போது போலீசார் என் வீட்டினுள் வந்து என்னையும், என் குடும்பத்தினரையும் தாக்கினர். என்னையும், என் மகனையும் ஜீப்பில் ஏற்றி சென்றனர். அரை நிர்வாணமாக்கினர். எனவே, எங்களுக்கு மனித உரிமை மீறல் நடந்துள்ளது. இதற்காக போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நிலுவையில் உள்ளது. இதனிடையே, இன்ஸ்பெக்டர் சகீலா தரப்பில், தன் மீதான குற்றசாட்டுகளை ரத்துசெய்து தன்னை விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.



 

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சுந்தர காமேஷ் மார்த்தாண்டன், மனுதாரர் தன் மீதான குற்றசாட்டை ஒப்புக்கொண்டதாகவே தெரிகிறது. மனுதாரரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. இதுபோன்ற நடவடிக்கையை ஊக்குவிக்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தப் பணத்தை பிரதான வழக்கின் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.