தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. மதுரை மட்டுமில்லாமல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் அரசு இராசாசி மருத்துவமனையால் பயன்பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு முக்கிய அறுவை சிகிக்களை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் அதிகளவு தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினர், என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக மூளை வாஸ்குலர் குறைபாடுகளுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை அளித்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை சாதனை செய்துள்ளது.


அரசு ராஜாஜி மருத்துவமனை, கதிரியக்க சிகிச்சைப் பிரிவுக்கு மதுரையை சேர்ந்த 24 வயது இளைஞர் முனிய சிவா என்பவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர் வலிப்பு நோயால் 15 வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவ பரிசோதனையில் மூளையில் வாஸ்குலர் குறைபாடு (AV Malformation) இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து, எம்.ஆர்.ஐ பரிசோதனை மூலம் வாாஸ்குலர் குறைபாடு உறுதி செய்யப்பட்டது. 




இந்நிலையில் முனிய சிவாவுக்கு அரசு  ராஜாஜி மருத்துவமனையில் தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வலிப்பு நோயின் வீரியம் தீவிரம் அடைந்ததால் இளைஞர் முனிய சிவாக்கு மூளை ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கச் சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டு, பாலரெங்க புரத்தில் மண்டல புற்றுநோய் மையத்தில் (Stereotactic Radiotherapy)  ஸ்டீரியோடாக்டிக் ரேடியோதெரபி சிகிச்சை மூலம் 6 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. 



 

அதிநவீன நேரியல் முடுக்கி ( linear accelerator - true beam)  என்ற கதிரியக்க கருவி மூலம் ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ தெரபி சிகிச்சையை மிகத்துல்லியமாக, மற்ற உறுப்புகளுக்கு எந்தவிதமான கதிரியக்க பாதிப்பும் இல்லாமல் புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கும் வகையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 30 முதல் 35 நாட்களுக்கு கொடுக்க வேண்டிய இந்த கதிரியக்கச் சிகிச்சையை 5 அல்லது 6 நாட்களில் அதே வீரியத்துடன் கொடுத்து முடிக்க முடியும்.  இந்த ஸ்டீரியோடாக்டிக் ரேடியோதெரபி மூலம் வாஸ்குலார் குறைபாடு, பிட்யூடரி கட்டிகள், உறைப்புற்று, அக்குவஸ்டிக் நியூரோமா, குளோமஸ் டி உள்ளிட்ட நோய்களையும் கட்டுப்படுத்த முடியும். இந்த சிகிச்சையால் முனிய சிவா குணமடைந்து தற்பொழுது நன்றாக உள்ளார்.



தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே  முதன்முதலாக மதுரையில் உள்ள கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த சிகிச்சையின் மூலம் மூளையில் ஏற்படும் கட்டிகள், நுரையீரல் கட்டிகள், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியாத கட்டிகள் மற்றும் அளவு சிறிய கட்டிகள் உடலில் எங்கிருந்தாலும் அதற்கு சிகிச்சை அளிக்க முடியும். இச்சிகிச்சை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக கொடுக்கப்படும் எனவும், இளைஞர் முனிய சிவாக்கு கதிரியக்க சிகிச்சையை சிறப்பாக மேற்கொண்ட மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் பாஸ்கர்  தலைமையிலான மருத்துவ குழுவினருக்கு அரசு மருத்துவமனை முதல்வர் மரு.ரத்னவேல் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.