புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜா (26). இவர் ஏம்பல் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார்  அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி அவருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இவரது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து உறுதிப்படுத்த புதுக்கோட்டை காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில், "குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை சரி என்று வாதிடப்பட்டதோடு அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து  கீழமை நீதிமன்றம் முறையான விசாரணை செய்தே தூக்கு தண்டனை வழங்கி உள்ளது. எனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.





 

பண்டிகை தினங்களில் டாஸ்மாக் கடையை மூடக்கோரிய வழக்கு - நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து வாபஸ்

 

தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்துள்ள வழக்கில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் விடுமுறை நாட்கள் குறித்து தலைமை செயலாளர் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையில் உள்ள பொது விடுமுறை நாட்களான புத்தாண்டு, பொங்கல், மாட்டுப் பொங்கல், தைப்பூசம், குடியரசு தினம், மொகரம், பக்ரீத், ரம்ஜான், புனித வெள்ளி, கிறுஸ்த்துமஸ், தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, மே தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு போன்றவை அறிவிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார் 

 

அந்த உத்தரவு அனைத்து தமிழக அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் போன்ற அனைத்து தமிழக அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனையகங்களுக்கு, விடுமுறை விடாமல் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் தேதியன்று மது விற்பனை கிடையாது என்றும், பெரும்பாலான பண்டிகை தினங்களில் மது விற்பனை கிடையாது என்றும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து பண்டிகை நாட்களிலும் மது விற்பனை கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

பண்டிகை காலங்களில் வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடவே விடுமுறை விடப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் பண்டிகை தினத்தில் மது அருந்தி நிறைய விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும், சந்தோசமாக இருக்க வேண்டிய இல்லம் துக்க வீடாக மாறுகிறது என்றும் மனுவில் வேதனை தெரிவித்துள்ளார்.எனவே தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக்  மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளித்து மது விற்பனை இல்லா நாட்களாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

 

குறிப்பாக ஜனவரி 14, 15, 16, 18 கடைகளை மூட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட வேண்டுமென இடைக்கால கோரிக்கையும் வைத்துள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் விற்பனையகங்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டப்படிதான் வரும் என்றும், அரசு பொது விடுமுறை நாட்களில் கட்டுப்படாது என தெரிவித்தனர்.

 

மேலும் வழக்கறிஞர்கள் பொது நல வழக்கு தொடர்வது குறித்து என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, பொது நல வழக்குகள் இல்லாமல், வழக்காடிகளுக்காக எத்தனை வழக்கு தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர். பார் கவுன்சில் பதிவை ரத்து செய்யவும் உத்தரவிடுவோம் என எச்சரித்தனர். விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்பதாக எச்சரித்தனர்.இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.