ஃப்ரீ பையர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

நாகர்கோவிலைச் சேர்ந்த ஐயரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பிரீ பையர் விளையாட்டு விளையாடிய தாகவும் அதில், ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜாப்ரின் என்பவரோடு சென்றிருக்கலாம் என தெரிவித்தனர். ஆகவே, எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கொரோனா ஊரடங்கு காலகட்டம் என்பது இளைய தலைமுறைக்கு சோதனை காலகட்டமாகவே அமைந்தது. ஆன்லைன் வகுப்பு நடைபெற்ற பொழுது இளைய தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்தில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியுள்ளனர். இளம் பருவத்தினர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர் நிஜ வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனர். தற்போது உள்ள  தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகள் அனைவரும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை. பிரீ பையர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரவர்களே அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள்.

 

இந்த வழக்கில் காணாமல் போன பெண் பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால் பெற்றோர்கள் தனது மகளை அழைத்துச் செல்லலாம், பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படும் வாலிபர் மீண்டும் பெண்ணிற்கு எந்த விதமான இடையூறும் செய்யக் கூடாது அவ்வாறு செய்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.